மதுராந்தகம், ஏப். 13- ஒழுப்பாக்கம் கிராமத்தில் குடியிருக்கும் தலித் மக்களுக்கு பட்டா வழங்ககோரி விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. ஒழுப்பாக்கம் அண்ணா நகர் பகுதியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் தலித் மக்களுக்கு குடிமனை பட்டா கேட்டு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் இந்த மனுவை அளித்தனர். மதுராந்தகம் வட்டம், சிலாவட்டம் ஊராட்சி ஒழுப்பாக்கம் அண்ணா நகர் பகுதியில் 50க்கும் மேற்பட்ட தலித் மக்கள் சுமார் 50 வருடங்களுக்கு மேலாக அரசு நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அரசின் சார்பில் குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று வரை குடிமனை பட்டா இல்லாததால் மின் இணைப்பு, தொகுப்பு வீடு, சாலை வசதி, குடிதண்ணீர் வசதி உள்ளிட்ட அரசின் எந்த ஒரு நலத்திட்டங்களும் வழங்கப்படாமல் உள்ளது. இப்பகுதி மக்கள் தாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு வீட்டு வரி முறையாக செலுத்தி வருகின்றனர். இருந்த போதிலும் மின் இணைப்பு இல்லாததால் அப்பகுதியில் உள்ள மாணவர்கள் படிக்கமுடியாமல் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் அண்ணா நகர் பகுதியில் வசித்து வரும் தலித் மக்களுக்கு உடனடியாக குடிமனை பட்டா வழங்கிட வலியுறுத்தி மதுராந்தகம் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர். விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் க.புருஷோத்தமன், மாவட்டப் பொரு ளாளர் சசிகுமார், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுராந்தகம் வட்டச் செயலாளர் ராஜா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் ச.ஜீவானந்தம் உள்ளிட்டோர் உட னிருந்தனர்.