districts

img

ஆற்றுக்குள் ஆபத்தான பயணம் பாலம் கட்ட மக்கள் கோரிக்கை

கிருஷ்ணகிரி,டிச 11-  நந்தகுண்டப் பள்ளி கிராமத்தினர் ஆபத்தான முறையில் ஆற்றுக்குள் இறங்கி செல்வதை தவிர்க்க பாலம் கட்டித்தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  சூளகிரி ஒன்றியம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள நாச்சிக்குப்பம் ஊராட்சி தமிழக ஆந்திர எல்லையில் உள்ள மலையும் வனமும் சூழ்ந்த பகுதியாகும்.இந்த மலைப் பகுதியிலிருந்து வரும் காட்டாறு மார்க்கண்டேய நதி வேப்பனப்பள்ளி பகுதியையும் நாச்சிக்குப்பம் பகுதியையும்  பிரிக்கும். ஆற்றின் வடக்கு பகுதியில் மலையை ஒட்டி 15 க்கும் மேற்பட்ட பல சிறு  கிராமங்கள் உள்ளன. அங்குள்ள மக்கள் வேலைக்காகவும், அரசு அலுவலகங்கள்,பள்ளி,கல்லூரிகள், ரேசன் கடை, மருத்துவமனை, உணவுப் பொருட்கள் வாங்கு வதற்கும் என அனைத்திற்கும் தினமும் ஆற்றை கடந்து தான் வேப்பனப்பள்ளிக்கு வந்து செல்ல வேண்டியுள்ளது. மார்க்கண்டேய நதியில் காட்டாற்று வெள்ளம் வரும் நாட்களில் எல்லாம் ஆற்றுக்குள் நீரில் இறங்கி ஆபத்தான பயணமாகவே கடந்து வர வேண்டியுள்ளது. பல நேரங்களில் பலர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பாக வர வேண்டும் எனில் 10 கி.மீ வரை நடந்தே  வர வேண்டியுள்ளது.  கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத கடும் மழையின் காரண மாக மார்க்கண்டேய நதியில் வெள்ளப்பெருக்கு அதிகம் ஏற்பட்டுள்ளது.இதனால் நதியின் வடக்கு பகுதியில் உள்ள கிராம மக்கள் தற்போது ஆற்றுக்குள் குறுக்கே கயிறு கட்டி அதைப் பிடித்துக்கொண்டு இடுப்பளவு கழுத்தளவு நீருக்குள் இறங்கி கடந்து வருகின்றனர்.நாச்சிக்குப்பம் ஊராட்சி நந்தகுண்டபள்ளியில் 160க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்து மக்களும் கடந்த 30 நாட்களாக குறுக்கே கட்டப்பட்ட கயிற்றைப் பிடித்துக் கொண்டு கழுத்தளவு  ஓடும் ஆற்று தண்ணீருக்குள் இறங்கி தலையிலும் தோளிலும் சுமை களை வைத்துக்கொண்டும் குழந்தைகளையும் மாணவர்களை யும் தோளுக்கு மேல் தூக்கிக் கொண்டும் சாகசப்பயணமாக கடந்து வருகின்றனர். முப்பதுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும் ஆபத்தான மரண பயணம் இன்று வரை வந்து செல்கின்றனர்.நந்தகுண்டபள்ளி அருகில் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டித்தர வேண்டி மாவட்ட ஆட்சியர் உட்பட அனைத்து அதிகாரிகளிடமும் நீண்ட காலமாக பல மனுக்கள் கொடுத்துள்ளனர். இதுவரை இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போதைய ஆபத்தான நிலையை அறிந்து இப்பகுதியில் ஆற்றின் மீது பாலம் கட்டித்தர உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.