districts

img

பட்டாவை கிராமக்கணக்கில் பதிவேற்றம் செய்யக்கோரி காத்திருப்பு போராட்டம்

கிருஷ்ணகிரி,ஏப்.4-  சூளகிரி வட்டம், துப்புக்கானப்பள்ளி கிராமம் ஒட்டிய பகுதியில் 1999 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட  20 வீட்டு மனை பட்டாக்களை கிராமக்கணக்கில் பதிவேற்றம் செய்யவேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் காத்திருப்புபோராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து 5 முறை  சூளகிரி வட்டாட்சியர்,கிராம நிர்வாக அலுவலரிடம் மனு கொடுக்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வாழ்வதற்கு வேறு ஏதும் வழியில்லாததால் பட்டா கொடுக்கப்பட்ட இடத்தில் 9 குடும்பத்தினர் வீடு கட்டிவருகின்றனர். இந்த இடங்களில்  பாம்புகள் உள்ளிட்ட விஷப்பூச்சி களால் அங்குள்ள மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவருகிறது. மேலும், இங்கு, குடியிருக்க முடியாது என்பதால் மின் இணைப்பு கேட்டு மீண்டும் மனு  கொடுத்தும் இணைப்பு அனுமதி கடிதம் வழங்காமல் கிராம நிர்வாக அலுவலர் சிவப்பிரியாவும்,வட்ட அலுவலர்களும் அலைக்கழித்து வருகின்றனர்.  பட்டா கொடுத்து விட்டோம். கிராம கணக்கில் ஏற்றப் படாததால் மின் இணைப்புக்கு அனுமதி கடிதம் கொடுக்க முடியாது என தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் மலைவாழ் மக்கள் சங்கத்தினர்  சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறை யிட்டபோது அவர்கள் ஏந்த பதிலும் அளிக்காமல் மறுப்பு  தெரிவித்தனர். அனுமதி கடிதம் பெறாமல் இங்கிருந்து செல்ல மாட்டோம் என வீடு கட்டியுள்ள பட்டாதாரர்கள் குண்டப்பா,பக்ஷினிஷா, நாராயணப்பா கோவிந்தப்பா குடும்பத்தினர் விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் முருகேஷ் தலைமையில் கிராமநிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பே அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி அங்கு வந்த காவல் ஆய்வாளர் சிவகுமார் அப்பகுதிக்கு நேரில் வந்து ஆய்வு செய்து மின் இணைப்புக்கான மனுவை பார்வையிட்டுஅனுமதி கடிதம் அளிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.