சென்னை,செப். 14- இந்திய நகரங்களில் எரிவாயு வினியோகம் செய்யும் நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக திகழும் ஏஜி&பி பிரதம் நிறுவனம், காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் புதிதாக 2 சிஎன்ஜி நிலையங்களை திறந்துள்ளது. இதன்மூலம் காஞ்சிபுரத்தில் இதன் கியாஸ் நிரப்பும் மையங்களின் எண்ணிக்கை31ஆக அதிகரித்துள்ளது. தற்போது இந்நிறுவனத்தின் மூலம் புதிதாக திறக்கப்பட்டுள்ள ‘டாட்டர் பூஸ்டர் ஸ்டேஷன்’ டிபிஎஸ் நிலையத்தில் ஆட்டோ உள்ளிட்ட 3 சக்கர வாகனங்கள் மற்றும் கார், பஸ் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களுக்கு சிஎன்ஜி எரிபொருள் எந்தவித தடையும் இன்றி விநியோகம் செய்யப்படும் என்று ஏஜி&பி பிரதம் தெரிவித்துள்ளது. முன்னதாக சிட்லபாக்கம், எச்பிசிஎல் மகாலட்சுமி ஏஜென்சியில் அமைக்கப்பட்டுள்ள இந்நிறுவனத்தின் 30வது மையத்தை தாம்பரம் எம்.எல்.ஏ. கருணாநிதி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தாம்பரம் துணை மேயர் காமராஜ், 2வது மண்டல தலைவர் ஜோசப் அண்ணாதுரை, எச்பிசிஎல் டீலர் மகாலட்சுமி கருணாகரன், நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி சித்ரதீப் தத்தா மற்றும் நிறுவனத்தின் காஞ்சிபுரம் மண்டல தலைவர் திருக்குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.