சென்னை, ஜூன் 7 -
‘ஓஎம்ஆர் - நம்ம ஊரு புத்தகத் திருவிழா’ செவ்வாயன்று (ஜூன் 6) பெருங்குடி சுங்கச்சாவடி அருகே உள்ள வள்ளலார் சன்மார்க்க அரங்கில் தொடங்கியது.
தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் இடம் பெற்றுள்ள இந்த புத்தகக்காட்சி ஜூன் 20ந் தேதி வரை நடைபெறுகிறது. காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் இந்த கண்காட்சிக்கு வருவோருக்கு நுழைவு கட்டணம் கிடையாது. புத்தகங்களுக்கு 10 விழுக்காடு கழிவு வழங்கப்படுகிறது.
பாரதி புத்தகாலயம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், யுனைட், சோழிங்கநல்லூர் குடியிருப்போர் நலச் சங்கங்களின் பேரமைப்பு ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த உள்ளூர் புத்தக்காட்சியை நடத்துகின்றன.
பாராட்டு
‘முதல் தலைமுறை அறக்கட்டளை’ மாணவர்களின் பறை இசை வரவேற்போடு, புத்தகக்காட்சியை எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “பெரிய புத்தகக்காட்சிகளை போன்று உள்ளூர் அளவில் நடைபெறும் சிறு சிறு புத்தகக்காட்சிகளும் முக்கியமானது. மக்கள் இருக்கும் இடங்களை நோக்கி புத்தகங்களை கொண்டு செல்வது சிறப்பானது.
புத்தகங்களை மக்களிடையே கொண்டு செல்லும் பெரும் இயக்கத்தை நீண்ட காலமாக பாரதி புத்தகாலயம் செய்து வருகிறது. தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதும் புத்தக்காட்சியை நடத்துவதற்கு முன்பாக, பள்ளி, கல்லூரி, சிறுசிறு ஊர்களில் பெரும் இயக்கமாக புத்தக்காட்சியை பாரதி புத்தகாலயம் நடத்துகிறது.
இத்தகைய கண்காட்சிகளை இடையிறாது நடத்த வேண்டும். காலம்காலமாக உருவாக்கி வைத்துள்ள அறிவுக்கொடையை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதும், மக்களின் மனங்களில் கொண்டு சேர்ப்பதும் முக்கியமானது. இதேபோன்று சென்னையின் அனைத்து பகுதிகளிலும் புத்தகக்காட்சியை நடத்த வேண்டும். அப்பார்ட்மெண்ட்கள் தோறும் நடத்த வேண்டும்.” என்றார்.
முனைவர் டி.ஆர்.கோவிந்தராஜன் விற்பனையை தொடங்கி வைக்க கவிஞர் எம்.சக்தி புத்தகங்களை வாங்கிக் கொண்டார். இந்த நிகழ்விற்கு சோழிங்கநல்லூர் குடியிருப்போர் நலச்சங்கங்களின் பேரமைப்பு பொதுச்செயலாளர் வி.பார்த்திபன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் கோ.பூங்காவனம் வரவேற்க, தமிழ்நாடு அறிவியல் இயக்க செயற்பாட்டாளர் அ.கு.ராஜசிம்மன் நன்றி கூறினார்.