திருவள்ளூர், டிச 30- கும்மிடிப்பூண்டி, பிரித்திவி நகர் நெடுஞ்சாலை பகுதியில் தடுப்பு சுவரை அகற்ற கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் நூதன போராட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட ப்ரீத்திவி நகர். இங்குள்ள ஜிஎன்டி சாலை வழியாக பெத்திகுப்பம், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி, எளாவூர், நரசிங்கபுரம், பெரிய ஓபுளாபுரம், கோட்டக்கரை, மாதர் பாக்கம், மெதி பாளையம், ஆரம்பாக்கம், சித்ராஜ் கண்டிகை, சுண்ணாம்பு குளம், மேலாக்கனி, எகுமதுரை, கண்ணன் பாக்கம், நத்தம், தேர்வழி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட ஊராட்சிகளை சேர்ந்த கிராமப்புற மக்கள் கும்மிடிப்பூண்டி பஜார் மற்றும் பிடிஒ அலுவலகம், காவல் நிலையங்களுக்கு இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் ஆகியவற்றில் பயணித்து வருகின்றனர். இந்த நிலையில் பெத்திகுப்பம், ஊராட்சிக்கு உட்பட்ட முனுசாமி நகர், பிருத்திவி நகர் ஆகிய பகுதிகளில் மழைக்காலங்களில் மழைநீர் தாமரை ஏரியில் இருந்து இரண்டு பகுதிகளுக்கும் நுழைந்து பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கால்வாய் அமைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகள் முனுசாமி நகரிலிருந்து பிரித்திவி நகருக்கு இருபுறங்களிலும் கால்வாய் அமைத்து தர மேம்பாலம் அமைக்கும் பணிகள் ஓராண்டுக்கு முன்பு முடிவுற்றது. ஆனால் தற்பொழுது பெய்த புயல் காரணமாக மழை நீர் உடனுக்குடன் வடிந்தது குறிப்பிடத் தக்கது. இந்த கால்வாய் பணிகளுக்காக ஆங்காங்கே நெடுஞ்சாலைத்துறை தடுப்பு சுவர்களை அமைத்து பணிகள் மேற் கொண்டது ஆனால் பணிகள் முடிந்து ஓராண்டுகள் ஆகியும் தடுப்பு சுவர்களில் கம்பிகள் வெளியில் தெரியும் அளவிற்கு நீண்டு காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்துக்குள்ளாகி யுள்ளது. அதுமட்டுமின்றி உயிருக்கு ஆபத்து ஏற்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாகவும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாகவும் நெடுஞ்சாலை துறைக்கு ஏற்கெனவே மனு அளித்துள்ளனர். அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் சனிக்கிழமையன்று (டிச 30), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன், இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் ப.லோகநாதன் ஆகியோர் தலைமையில் தடுப்பு சுவருக்கு வாரந்தோறும் பூஜை போட்டு ஆர்ப்பாட்டம் நடத்தும் வகையில் முதல் நாளான டிசம்பர் 30 அன்று தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் நூதனப் போராட்டத்தை துவக்கினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பதாகை களில் வாசகங்கள் எழுதிவைத்தனர். இதை அறிந்த கும்மிடிப்பூண்டி காவல்துறை துணை ஆய்வாளர் ரவி, மற்றும் தனி பிரிவு சுரேஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் போது நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அகற்றப்படும் என உறுதி அளித்த பின்னர் கூட்டம் கலைந்து சென்றனர். பின்னர் அடுத்த அரை மணி நேரத்தில் நெடுஞ்சாலை துறை யினர் தடுப்பு சுவர்களை நீட்டிக் கொண்டி ருந்த கம்பிகளை அகற்றியது குறிப்பிடத் தக்கது.