districts

img

சீரமைக்கப்படாத விளையாட்டு திடல்: ஏமாற்றத்தோடு திருப்பும் குழந்தைகள்

சென்னை, செப். 18 - ஆர்வத்தோடு வரும் குழந்தைகள் ஏமாற்றத்தோடு திரும்பி செல்லும் நிலை யில் அசோக் நகர் சிறுவர் விளையாட்டு திடல் உள்ளது. சென்னை மாநகராட்சியில் 786 பூங்காக் கள் உள்ளன. இவற்றில்  584 பூங்காக்கள் தனியார் வாயிலாகவும், 57 பூங்காக்கள் தத்தெடுப்பு முறையில் நிறுவனங்களும், 145 பூங்காக்களை மாநகராட்சி நேரடியாகவும் பராமரித்து வருகிறது. இந்த 786 பூங்காக்களில், பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் 525 பூங்காக்கள் உள்ளன. இவற்றில் சிறுவர் விளையாட்டு திடல் மற்றும் உபகரணங்கள், உடற்பயிற்சி உபகரணங்கள், நடைபயிற்சி பாதைகள், தியான மண்டபங்கள், பயிற்சி திடல்கள், நீரூற்றுகள், வண்ண இசை நீரூற்றுகள், போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதேபோன்று மாநகராட்சி (கோடம் பாக்கம்) 10 வது மண்டலம், 136 வது  வார்டு, அசோக் நகர் 16 வது நிழற் சாலை யில் ஒரு சிறுவர் விளையாட்டு திடல் உள்ளது. 2009ம் ஆண்டு தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் இந்த திடல் திறந்து வைக்கப்பட்டது. காலை 5 முதல் 9 மணி வரையிலும், மாலையில் 4-8 மணி வரையிலும் விளையாட்டு திடல் திறக்கப்படுகிறது. பூங்காவுடன் கூடிய இந்த விளையாட்டு திடலில் குழந்தைகளுக்கான சறுக்கு மரம், சுழல் சறுக்கு மரம், ஊஞ்சல், ஏற்றம் போன்ற  உபகரணங்கள் வைக்கப்பட்டன. ஆனால் இவற்றில் 80 விழுக்காடு உபகரணங்களை உடைந்து, நொறுங்கி பயன்படுத்த முடியாமல் ஆபத்தான நிலையில் உள்ளது.  சுழல் சறுக்கு மரம் மற்றும்  பைபர் சறுக்கு  மரம் உடைந்து நொறுங்கி ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில் உள்ளது. வட்ட வடிவில் அமைக்கப்பட்ட 6 ஊஞ்சல்க ளில் 3 அறுந்து கிடக்கிறது. ஒன்றை காணவில்லை. மேலும் திட்டல் முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் விளையாட்டு திடலுக்கு பெற்றோருடன் ஆர்வத்தோடு வரும் குழந்தைகள் ஏமாற்றம் அடைகின்றனர். “இந்த விளையாட்டு திடலானது தற்போது பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவும், அமர்ந்து ஓய்வெடுக்க வும் மட்டுமே பயன்படுகிறது. சிறு மழைக்கே  மைதானம் முழுக்க தண்ணீர் நிரம்பி  குட்டைபோல் நிற்கிறது. மழைநீர் வடிய 2 நாட்கள் ஆகிறது. உபகரணங்கள் அனைத்தும் உடைந்து, நொறுங்கி கிடக்கிறது. விளையாட ஆர்வத் தோடு வரும் குழந்தைகள் ஏமாற்றமடைந்து, மனச்சோர்வுடன் திரும்பி செல்கின்றனர். இது தொடர்பாக அதிகாரிகள், கவுன்சிலர் கண்டுகொள்வதே இல்லை என புகார் எழுந்துள்ளது. விளையாட்டு திடலை குழந்தைகள் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்த வேண்டும். உபகரணங்களில் ஒட்டு வேலை  செய்யாமல், புதிதாக பொருத்த வேண்டும்”  என்று பெற்றோர் ஒருவர் தெரிவித்தார். குழந்தைகளின் மனம், உடல் ஆரோக்கி யத்தை வலுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம்  நடவடிக்கை எடுக்குமா?