சென்னை, ஆக. 30- எம்.கே.பி. நகர் மேற்கு சாலையோர வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று, இடத்தை ஒதுக்கீடு செய்ய அளவிடும் பணி வெள்ளியன்று (ஆக. 30) துவங்கியது. எம்.கே.பி. நகர் வடக்கு அவென்யூ பகுதியை விற்பனை மண்டலமாக மாற்றும் திட்டத்தின் அடிப்படையில் எம்கேபி நகர் மேற்கு அவென்யூ, எம்கேபி நகர் சென்ட்ரல் அவென்யூ, மீனாம்பாள் சாலையில் அமைந்துள்ள சிறுகடை வியாபாரிகளை அப்புறப்படுத்தி எம்.கே.பி. நகர் வடக்கு அவென்யூ பகுதியில் வியாபாரம் செய்யுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எம்கேபி நகர் வடக்கு அவென்யூ மிகவும் தாழ்வான பகுதி. மழைக்காலங்களில் ஒரு ஆள் மூழ்கும் அளவிற்கு மழை நீர் தேங்கி நிற்கும். மேலும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியாகும். எனவே வியாபாரிகள் வியாபாரம் செய்வதற்கு உகந்த இடமில்லை. இதனால் இந்த மூன்று பகுதிக்கு உட்பட்ட 250க்கும் மேற்பட்ட சாலையோர சிறுகடை வியாபாரிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என்றும், எனவே வியாபாரம் செய்யும் இடத்திலேயே கடைகளை முறைப்படுத்தி தர வேண்டும் என்றும் விற்பனைக்குழு கூட்டத்தில் நகர விற்பனைக்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தினர். மேலும் அண்மையில் சென்னை மாவட்ட சாலையோர சிறுகடை விற்பனையாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆணையரை சந்தித்து மனு அளித்தனர். இந்நிலையில் நகர விற்பனை குழு உறுப்பினர்கள் மற்றும் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, அதிகாரிகள், காவல் துறையினர் வெள்ளிக்கிழமை சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி 6க்கு 3 என்ற அளவில் கடைகளை ஒதுக்கீடு செய்வதாக தெரிவித்தனர். இதையடுத்து இடத்தை அளவீடு செய்யும் பணிகளை அதிகாரிகள் துவக்கினர். இதில் சாலையோர சிறுகடை விற்பனையாளர்கள் சங்கத்தின் செயலாளர் டி.வெங்கட், நகர விற்பனைக்குழு உறுப்பினர் ஜி.மோனிஷா, எம்கேபி நகர் வியாபாரிகள் சங்க செயலாளர் எஸ்.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.