districts

சென்னை முக்கிய செய்திகள்

ராணுவ பயிற்சி மையத்திலிருந்து  குறி தவறிய தோட்டா: பெண் காயம்

செங்கல்பட்டு,ஜன.7- செங்கல்பட்டு அருகே ராணுவ பயிற்சி மையத்திலிருந்து தவறி கிராமத்திற்குள் சென்று விழுந்துள்ளது ஒரு துப்பாக்கி தோட்டா. நல்வாய்ப்பாக அங்கிருந்த பெண் உயிர் தப்பினார்.  செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோவிலை அடுத்த அனுமந்தபுரம் வனப்பகுதியில் ராணுவ வீரர்கள் பயிற்சி முகாம் உள்ளது. இங்கு ராணுவ வீரர்களுக்கு, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பயன்படுத்தி பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி மையத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சென்னேரி கிராமத்தை சேர்ந்தவர் மோகன். இவரின் மனைவி ஜெயலட்சுமி.  சனிக்கிழமை காலை ஜெயலட்சுமி தனது வீட்டின் வரவேற்பு அறையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் மீது துப்பாக்கி தோட்டா பய்ந்தது. நல்வாய்ப்பாக அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.  இது குறித்து, கிராம மக்கள் செங்கல்பட்டு தாலுகா காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து செங்கல்பட்டு தாசில்தார், வருவாய்த் துறை அதிகாரிகள், போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சென்னேரி கிராமத்தை ஆய்வு செய்து கிராம மக்களிடம் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அடிக்கடி இதுபோன்ற துப்பாக்கி தோட்டாக்கள் கிராமத்தில் வந்து விழுவதாக கிராம மக்கள் தெரிவித்தனர். ராணுவ பயிற்சி மையம் உள்ள பகுதி மறைமலைநகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி என்பதால் அங்கு மறைமலைநகர் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் முத்து சுப்ரமணியம் மற்றும் அனுமந்தபுரம் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோரும் விசாரணை நடத்தினர்.

வேங்கைவயல் வழக்கு:  ஜன.9-க்கு ஒத்திவைப்பு

புதுக்கோட்டை, ஜன.7 - புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயலில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தற்போது விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி போலீசார், சந்தேகத்துக்குரிய 10 பேரிடம் உண்மை அறியும் பரிசோதனை நடத்த முடிவு செய்தனர். இதற்கான அனுமதி கோரி மாவட்ட எஸ்.சி,  எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு  நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர். உண்மை  அறியும் சோதனை தொடர்பாக விரிவான தகவல்களுடன் மனு செய்ய நீதிபதி அறிவுறுத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி துணைக் காவல் கண்காணிப்பாளர் பால்பாண்டி மருத்துவ விடுப்பில் இருந்ததால், 3 முறை இந்த விசாரணை ஒத்திவைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சனிக்கிழமை இந்த  வழக்கு விசாரணைக்கு வந்தது. டிஎஸ்பி பால்பாண்டி ஆஜராகி, உண்மை அறியும் சோதனை தொடர்பான விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்தார். இந்த அறிக்கையின் நகல்களை தொடர்புடைய 10 பேருக்கும் வழங்கி, அவர்களின் கருத்தை அறியும் வகையில் வழக்கை, ஜன.9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி எஸ்.ஜெயந்தி உத்தரவிட்டார்.

சென்னை பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டியில்  ‘காலணித் திருவிழா 2024’

சென்னை, ஜன.7- சென்னையில் உள்ள முன்னணி வணிக வளாகங்க ளில்  ஒன்றான பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் ‘காலணித் திருவிழா 2024’ என்னும் நிகழ்ச்சியை பிரபல திரைக்கலை ஞரும் தற்காப்பு கலைஞருமான ரித்திகா சிங் சனிக்கிழமை துவக்கி வைத்தார்.   இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்த அவர் அங்குள்ள பல்வேறு கடைகளுக்கு சென்று கடை உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுடன் பேசினார். பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் நைக், ரீபோக், பூமா, அடிடாஸ், ஸ்கெச்சர்ஸ், லைப் ஸ்டைல், கிளார்க்ஸ், ஹஷ் பப்பீஸ், டீசல், ஆல்டோ, பாட்டா, ஐஎன்சி 5, மோச்சி, சார்லஸ் & கீத்,  பேலெஸ், மெட்ரோ, ஜாக் & ஜோன்ஸ், அர்மானி எக்ஸ்சேஞ்ச், ஆசிக்ஸ், ஷாப்பர் ஸ்டாப்,  தி கலெக்டிவ்,  எச்&எம் மற்றும் பாரெவர் உள்ளிட்ட 21 பிராண்டுகள் உள்ளன. இந்த ஷாப்பிங் திருவிழாவையொட்டி ஜனவரி 11-ந்தேதி வரை இந்த பிராண்டுகள் 50 விழுக்காடு வரை தள்ளுபடி வழங்கு கின்றன.

தமிழகத்தில் புதிய விமானநிலையங்கள்  அமைக்கப்படும்: அமைச்சர் டி.ஆர்.பி ராஜா

சென்னை, ஜன.7- பரந்தூர் தவிர மேலும் சில விமான நிலையங்கள் தமிழகத்தில் அமைக்கப்படும் என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது  செய்தி யாளர்களிடம்  பேசிய அவர். “எதிர்பார்த்ததை விட முதலீட்டாளர் மாநாடு சிறப்பாக நடை பெறுகிறது. இதுவரை சென்னையை சுற்றி மட்டுமே இருந்துவந்த வளர்ச்சி, தற்போது சென்னை மட்டுமின்றி தென்தமிழகத்திற்கும் கிடைக்கப்போகிறது. இனி சென்னை மட்டுமே வளர்ச்சிபெறுகிறது என யாரும் சொல்ல மாட்டார்கள். தென் தமிழகத்திலும் அதிக முதலீடுகள் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது . பரந்தூர் தவிர மேலும் சில விமானநிலையங்கள் தமிழகத்தில் அமைய உள்ளது என்றார். முன்னதாக மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர், “இந்தியாவில் 2ஆவது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. தமிழ்நாட்டில் மொத்தமாக 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வரு கின்றன. இந்தியாவின் உற்பத்தி மையமாக தமிழ்நாடு விளங்குகிறது. வாகனம், டயர் உற்பத்தியில் முத லிடத்தில் உள்ளோம். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மின்னணு பொருட்களில் 30% பொருட்கள் இங்கு உற்பத்தியாகின்றன. கடந்த ஆண்டு மொத்தமாக ரூ.44 ஆயிரத்து 673 கோடி ரூபாய் அளவுக்கு மின்னணு பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இந்த ஆண்டு இதுவரை மட்டும் ரூ.46 ஆயிரத்து 587 கோடி அளவுக்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது” என்றார்.

விழுப்புரத்தில் தோழி மகளிர் விடுதி

விழுப்புரம்,ஜன.7- விழுப்புரத்தில் பணிபுரியும் மகளிர்களுக்கு அனைத்து வசதிகளுடன் குறைந்த வாடகையில் தோழி பணிபுரியும் மகளிர் விடுதி செயல்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் சி.பழனி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்ட, தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனத்தின் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில், வழுதரெட்டி, எல்லிஸ் சத்திரம் ரோடு, சுப்பிரமணிய சிவா நகர் என்ற முகவரியில் தோழி பணிபுரியும் மகளிர் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் பல்வேறு கிராமங்கள், வட்டம், மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்து பணிபுரிபவர்கள், பயிற்சிக்காக வருபவர்கள், பணி நிமித்தமாக ஒன்று அல்லது இரண்டு நாட்கள் தங்கும் மகளிர் பாதுகாப்பு மற்றும் அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக தொடங்கப்பட்ட சிறப்பு முயற்சியாகும். 2 பேர் தங்கும் வசதி கொண்ட படுக்கை அறைக்கு தலா ரூ.1,500 க்கும், 4 பேர் தங்கும் வசதி கொண்ட அறைக்கு தலா ரூ.2,000  என குறைந்த வாடகையில் அமைந்துள்ளது. இது விடுதி போன்று இல்லாமல் உழைக்கும் பெண்களுக்கான இல்லமாக செயல்படுகிறது. மேலும் தகவலுக்கு 04146-294470 என்ற தொலைபேசி எண்ணிலும், தோழி பணிபுரியும் மகளிர் விடுதி, சுப்ரமணிய சிவா நகர், எல்லீஸ் சத்திரம் ரோடு, வழுதரெட்டி விழுப்புரம் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அதில்  தெரிவித்துள்ளார்.

அறிவியல் இயக்க மாநாடு
வேலூர், ஜன.7- தமிழ்நாடு அறிவியல் இயக்க காட்பாடி ஒன்றிய கிளையின் மாநாட்டிற்கு அறிவுச்சுடர் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் முனைவர் பெ.அமுதா, மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் டி.முனுசாமி, ஆக்ஸிலியம் கல்லூரி கிளை செயலாளர் காயத்ரி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். காட்பாடி ஒன்றிய தலைவராக செ.நா.ஜனார்த்தனன், கவுரவத் தலைவராக அறிவுச்சுடர், செயலாளராக ஆர்.ராதாகிருஷ்ணன், பொருளாளராக எம்.ஈஸ்வரி உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.