விழுப்புரம்,ஜன.8- விழுப்புரம் மாவட்டத்தில், தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மரக்காணம் வட்டத்திற்குட்பட்ட வெள்ளக்குளத்தில் மழைநீர் சூழ்ந்த குடியிருப்பில் மூதாட்டி ஒருவர் சிக்கிக் கொண்டார். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கொட்டும் மழையிலும் சென்ற சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், மாவட்ட ஆட்சியர் சி.பழனி ஆகியோர் முன்னிலையில் பத்திரமாக மீட்டனர். பின்னர், வண்டி குளம் பகுதியில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பிறகு, எண்டியூர் இந்திரா நகர் பகுதியில், சாலையோரங்களில் தேங்கியுள்ள மழை நீரை பார்வையிட்டு, உடனடியாக அகற்ற உத்தரவிட்டார். மரக்காணம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் தயாளன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.