சென்னை, ஏப். 7 - மக்களவைத் தேர்தல் நாடு காக்கும் புரட்சியாக நினைத்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்தார். மத்தியசென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து தங்கசாலை, தா.பி.சத்திரம், தென் சென்னை வேட்பாளர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து மயிலாப்பூர், தசரதபுரம் ஆகிய இடங்களில் கமல்ஹாசன் பேசியதன் சுருக்கம் வருமாறு: சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டம் ரூ 68 ஆயிரம் கோடியில் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்திற்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய 50 விழுக்காடு தொகையான 34 ஆயிரம் கோடி ரூபாயில் ஒரு பைசாவை கூட தரவில்லை. அதனால், முதலமைச்சர் மாநில நிதியை கொண்டு திட்டத்தை தொடங்கி விட்டார். வெளிநாட்டில் இருந்து தலைவர் கள் வரும்போது குப்பம், ஏழ்மை வாழும் பகுதிகளை திரைபோட்டு மறைக்கிறார்கள். அதை அசிங்கம் என்று நினைப்பவர்கள் எதற்காக மக்களிடம் (பாஜகவினர்) ஓட்டுகேட்டு வருகிறீர்கள்? இந்தி எங்கு வாழட்டுமோ அங்கு வாழட்டும். தமிழ் எங்கெல்லாம் வளரட்டுமோ அங்கெல்லாம் வளரட்டும். 22 மொழிகளுக்கும் சம உரிமை தருவோம். ஒரே மொழி, ஒரே ஜிப்பா, ஒரே சப்பாத்தி, ஒரே பட்டன் (வாக்கு எந்திரம்) என ஆனால், ஒரே ஆள்தான் இருப்பார். சுதந்திரம் என்ற வார்த்தையை சொன்னாலே கைது செய்வார்கள்.
அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்
மாறுபட்ட கருத்துக்கள் இருந்தா லும் நாட்டிற்காக இணைந்து நின்ற தால்தான் விடுதலை பெற முடிந்தது. காந்தியுடன் மாறுபட்ட கருத்து இருந்தா லும், அம்பேத்கர் அரசியலமைப்பு சட்டத்தை எழுதினார். சர்வாதிகாரம் வந்துவிடாமல் இருக்க கோட்டைச் சுவர் போல் பல வாக்கியங்களை வைத்தனர். இந்தியாவில் அனை வரும் வணங்க கூடிய புத்தகமாக அரசியலமைப்புச் சட்டம் உள்ளது. அதை கொண்டாடும் பண்டிகை யாக தேர்தல் உள்ளது. இந்த தேர்தலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்தமுறை தவறவிட்டால், அடுத்த தேர்தலில் ஒரே மிஷின், ஒரே பட்டன்தான் இருக்கும். அதன்மேலே யும் ஒரே பெயர் இந்தியில் இருக்கும். ஒரே நாடு, ஒரே கொடி என்பது சரி. ஆனால், ஒரே கலர் என்பது தவறு; மூன்று கலர் என்று பழகிவிட்டது.
ஆணிப்படுக்கை அரசு வேண்டுமா?
இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக தமிழத்தை மாற்ற மாநில அரசு முயற்சித்து வருகிறது. இந்த மாடலை பின்பற்றத்தக்க மாடலாக மாறிவிட்டது. இந்தியாவை முன்னோக்கி நகராமல் தடுக்கும் ஒன்றிய அரசு வேண்டுமா? உணவும் கொடுத்து, கல்வி தரும் அரசு வேண்டுமா, நுழைவுத் தேர்வு வைத்து படிப்பதை தடுக்கும் ஒன்றிய அரசு வேண்டுமா? தொழில்களை பாதுகாக்கும் அரசா? ஜிஎஸ்டி விதித்து தெருவோர கடைகள், சிறு, குறு நிறுவனங்களை முடக்கும் அரசா? மகளிர் உரிமை தரும் அரசு வேண்டுமா? மணிப்பூரில் மகளிரை இழிவு செய்யும் அரசு வேண்டுமா?, விவசாயத்திற்கு இலவச மின்சாரம் தரும் அரசா?, விவசாயி களுக்கு ஆணி படுக்கை விரிக்கும் அரசா? தேசியக் கொடியின் வண்ணம் மாறக் கூடாது அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் அரசு வேண்டுமா? குடியரசு தலைவராகவே இருந்தா லும் தள்ளி வைக்கும் அரசு வேண்டுமா?, மூவர்ணக் கொடியை உயர்த்தி பிடிக்கும் அரசு வேண்டுமா? ஒரே வர்ணக் கொடியின் கீழ் 4 வ(ர்)ண்ணத்தில் மக்கள் வேண்டும் என்கிற அரசு வேண்டுமா? தேசியக் கொடியின் வண்ணம், எண்ணம் மாறக் கூடாது என்பதற்காக இத்தனை வண்ணக் கொடிகள் பறக்கின்றன. நாடு காக்கும் புரட்சியாக தேர்தலில் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.