districts

img

சுவாமி சகஜானந்தா நினைவைப் போற்றுவோம்!

ஏழை அடிதட்டுமக்கள் கல்வி யால் மட்டுமே முன்னேற முடியும் என்ற உயரிய நோக்கில் 100 ஆண்டு களுக்கு முன்பு தின்னை பள்ளியை தொடங்கி கல்வியை கற்பித்து சமூக மாற்றத்திற்கு போராடியவர் சுவாமி சகஜானந்தா. இவர் ஆரணியை அடுத்துள்ள மேல்புதுப்பாக்கத்தில் பட்டியல் சமூகத்தில் 1890 ஆம் ஆண்டு ஜனவரி 27-இல் பிறந்தார். இவரது இயற்பெயர் முனுசாமி. சிறுவயதிலிருந்தே ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர். குடும்ப வறுமையால் 8 ஆம் வகுப்புவரை மட்டுமே கல்வி பயின்றார். பின்னர் கர்நாடக கோலார் தங்கசுரங்கத்தில் பெற்றோருடன் வேலைக்கு சேர்ந்துள்ளார். அதன்பிறகு சென்னை வியாசர்பாடி கரபாத்திரசுவாமிக்கு சீடராகப் பணியாற்றியிருக்கிறார். ஏழை மற்றும் அடிதட்டு மக்களுக்குச் சேவை செய்த இவர், 1910-ஆம் ஆண்டில் சிதம்பரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். சிதம்பரத்தை சுற்றியுள்ள கிள்ளை, நஞ்சமகத்து வாழ்கை, கொடிப்பள்ளம் என 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் திண்ணை பள்ளிகளைத் தொடங்கி அங்கு படித்த மாணவர்களின் கல்வி, உணவுக்காக மக்களிடம் யாசகம் பெற்றுள்ளார். பின்னர் 1916-ஆம் ஆண்டில், ஆதிதிராவிட சமூக நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் பெயரில் ஓமக்குளத்தில் தொடக்க பள்ளியைத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து அரசு நந்தனார் பெயரில் மேல்நிலைப்பள்ளி கட்டப்பட்டது.

பின்னர் பெண்களுக்கு என மேல் நிலைப்பள்ளி, தனித்தனி விடுதி வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது.  கல்வி, ஆன்மீக சேவையுடன் பொது வாழ்கையிலும் தன்னை ஈடு படுத்தி கொண்ட சுவாமி சகஜானந்தா 34 ஆண்டுகள் சட்டப்பேரவை மற்றும் சட்டமேலவை உறுப்பினராகவும் பணியாற்றி அனைத்து சமூக மக்களின் நன்மதிப்பையும் பெற்றார். சிதம்பரம் நகர் மன்ற துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.  அடிதட்டு ஏழைமக்களிடம் கல்வி புரட்சியை ஏற்படுத்திய சுவாமி சகஜானந்தாவை வரும் தலை முறைகள் மறந்துவிடக் கூடாது என்பதற்காக அவரது பணிகளை அனைவரும் அறியும் வகையில் அவர் வாழ்ந்த இடமான நந்தனார் ஆண்கள் பள்ளி வாயிலில் சிலையுடன் மணி மண்டபம் அமைக்கப்பட்டது. இதற்காக சட்டமன்றத்தில் குரல் எழுப்பியவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இன்றைய மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன். அந்த மணிமண்டப வளாகத்தில், ஏழை மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுவதற்காக ரூ. 24 லட்சம் மதிப்பில் பயிற்சி மையம் ஒன்றையும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் தனது தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து அமைத்து கொடுத்தார். மாநில அரசின் பொது நிதி ரூ. 24 லட்சத்தில் நவீன நூலகம் கட்டப்பட்டு ஒரு ஆண்டாகக் கிடப்பில் உள்ளது.

அதனைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். சட்டமன்ற தந்தையாகச் செயல்பட்ட சகஜானந்தாவின் படத்தை சட்டபேரவையில் வைக்க வேண்டும் என்றும் நந்தனார் பள்ளி யில் படித்த முன்னாள் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், சகஜானந்தா மீது பற்றுள்ளவர்கள், மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்து சமூக மக்களின் கோரிக்கையாக உள்ளது.  விளிம்பு நிலை மக்களின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்ட சுவாமி சகஜானந்தாவின் 63 ஆவது நினைவு தினம் இன்று! ஏ.காளிதாஸ்