புதுச்சேரி, மே 9- ஆட்சியாளர்களின் அடக்கு முறையை எதிர்த்து போராட சி.எச்.பாலமோகனன் போன்ற தலைவர்கள் இன்றைக்கு தேவைப்படுகிறார்கள் என்று தலைவர்கள் தெரிவித்தனர். புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்தின் முன்னாள் கவுரவத் தலைவர் சி.எச்.பாலமோகனனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் திங்களன்று (மே 8) நடைபெற்றது. புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் க.லட்சுமிநாராயணன், சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் ஆர்.சிவா, சிஐடியு தமிழ்நாடு மாநில துணைப் பொதுச்செயலாளர் வி.குமார், மூத்த தொழிற்சங்க தலைவர் தா.முருகன், அரசு ஊழியர் சம்மேளன அறக்கட்டளை தலைவர் கே.முருகன், சம்மேளன கவுரவத் தலைவர் பிரேமதாசன், தலைவர் ரவிச்சந்திரன், நிர்வாகிகள் சீதாராமன், கீதா, கிறிஸ்டோபர் உட்பட பலர் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய தலைவர்கள், “போராடி பெற்ற சுதந்திரத்தை பாது காக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்” என்றனர். ஊழியர்களின் ஊதிய உயர்வுக்கு மட்டும் பாலமோகனன் போராட வில்லை. அவர் ஏற்றுகொண்ட கொள்கைக்குட்பட்டு தொழிற்சங்க பணிகளோடு, ஏழை எளிய மக்களை பாதிக்கும் ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளை எதிர்த்து சமரச மற்ற போராட்டத்தை நடத்தினார் என்றும் புகழாரம் சூட்டினர். ஒன்றியத்தில ஆட்சி செய்யும் பாஜக ஆட்சியின் அடக்குமுறைகளை எதிர்த்து போராட பாலமோகனன் போன்ற தலைவர்கள் நமக்கு வழிகாட்டியாக உள்ளார் என்றும் தலை வர்கள் தெரிவித்தனர்.