கிருஷ்ணகிரி, ஜூன் 2-
கிருஷ்ணகிரி மாவட்டம் திருவணப் பட்டியில் உள்ள பூங்கா நகர் ஏரியை குத்தகைக்கு எடுத்திருந்த ஒப்பந்தகாரர் ஏரியிலுள்ள மீன்களை பிடிப்பதற்காக ராட்சத மோட்டார்களை கொண்டு தண்ணீரை வெளியேற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விவசாயிகள் வட்டாட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம் பள்ளியை அடுத்த திருவணப்பட்டியில் அமைந்துள்ளது பூங்கா நகர் ஏரி. சுமார் 26.57 ஹெக்டேர் பரப்பளவை உடைய இந்த ஏரியின் மூலமாக ஆயிரக் கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் சுற்று வட்டார கிராமங்களின் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதில் இந்த ஏரியின் பங்கு முக்கியமானது. ஆண்டுதோறும் இந்த ஏரியில் மீன் வளர்ப்பதற்காக பொதுப்பணித்துறை மூலம் ஏலம் விடப்படுவது வழக்கம்.
இந்தாண்டு ஏலத்தை தீர்த்தகிரி என்பவர் எடுத்திருந்தார். ஒப்பந்த காலம் முடிவடைய இன்னும் பல நாட்கள் உள்ள நிலையில் ஏரியிலுள்ள அனைத்து மீன்களையும் பிடிப்பதற்காக தீர்த்தகிரி எந்தவித அனுமதியுமின்றி தன்னிச்சையாக ராட்சத மோட்டார்கள் மூலமாக தண்ணீரை கடந்த இரண்டு நாட்களாக வெளியேற்றி வருகிறார்.
இது அப்பகுதி விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏரியில் உள்ள நீரை நம்பித்தான் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. எனவே ஏரியில் உள்ள தண்ணீரை வெளியேற்றினால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.