கிருஷ்ணகிரி,ஜூன் 16-
கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்ட எல்லைகளில் உள்ள நெடுஞ்சாலைத் துறையினர் ஒருங்கிணைந்து சாலையைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தேன்கனிக்கோட்டை, கர்நாடக மாநிலம்,ஓசூர் பகுதி மக்கள் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிக்கு அஞ்செட்டி வழியாகச் சென்று வருகின்றனர். அதேபோல, பென்னாகரம், தருமபுரி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அஞ்செட்டி வழியாக பெங்களூரு, மைசூரு, ஓசூர் உள்ளிட்ட பகுதிக்கு வந்து செல்கின்றனர். கிராம மக்கள்,சுற்றுலாப் பயணிகள் அதிகம் பயன்படுத்தும் அஞ்செட்டி சாலையில் நாட்றாம்பாளையத்திலிருந்து ஒகேனக்கல் வரையான 20 கிமீ தூரம் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது.மழைக்கு இச்சாலையின் இருபுறமும் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த குறுகிய ஒரு வழி சாலையில், இருபுறமும் மண் சாலை பகுதி மழை அரிப்பால் பெரிய பள்ளமாக மாறியுள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் மண் சாலையில் இறங்கி ஓட்ட முடியாமல் நிலை தடுமாறி கீழே விழுந்து பல விபத்துக்கள் ஏற்படுகிறது.அஞ்செட்டியிலிருந்து ஒகேனக்கல்லுக்கு 30 நிமிடத்தில் செல்லும் பயணநேரம் பழுதான சாலையால் ஒரு மணி நேரமாகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் பயணம் செல்வோர் மிகுந்த சிரமத்தைச் சந்திக்கின்றனர்.
அடிக்கடி வனத்திலிருந்து வெளியேறும் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் சாலையில் வரும்போது,பழுதடைந்த குண்டும் குழியுமான மண் சாலைபகுதியில் இறங்கி வாகனங்களை வேகமாக ஓட்ட முடியாமல் உயிர் பயத்துடன் சாலையில் சென்று வருகின்றனர். எனவே, அஞ்செட்டி வட்டம் நாட்றாம்பாளையத்தில் இருந்து-ஒகேனக்கல் வரையான குறுகிய குண்டும் குழியுமான சாலையை அகலப்படுத்தி உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.