districts

img

கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா நிறைவு

கள்ளக்குறிச்சி, ஏப்.24 - கூவாகத்தில் கூத்தாண்டவரை வாழ்க்கைத்துணையாக ஏற்று தாலி கட்டிக் கொண்ட திருநங்கைகள் பக்தர்களுடன் வடம் பிடித்து தேரை இழுத்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம்கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழாவின் ஒருபகுதியாக பக்தர்கள் மற்றும் திருநங்கைகள் கூத்தாண்டவர் தேரை வடம் பிடித்து இழுக்கும் நிகழ்வு நடை பெற்றது, இதில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அ.ஜெ.மணிக்கண்ணன் மற்றும் திருநாவலூர் திமுக ஒன்றிய செயலாளர் கே.வி.முருகன் மற்றும் முக்கியஸ்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்து விழாவை துவங்கி வைத்தனர். இவ்விழாவில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக் கான திருநங்கைகள்  பங்கேற்றனர். நிகழ்வில் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க மாவட்ட காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் சார்பில் கூவாகத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்கள் மற்றும் திருநங்கைகளுக்கு மொபைல் டாய்லெட் வசதியும் குடிநீர் வசதியும் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்தது. மாவட்ட சுகாதார துறையின் மூலம் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டும் பக்தர்கள் திருவிழாவில் வருபவர்களுக்கு பாதுகாப்பு கருதி பல இடங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.