கடலூர் மாவட்டத்திற்கு ஜன. 13 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
கடலூர், ஜன.3- சிதம்பரம் நடராஜர் திருக்கோயில் ஆருத்ரா தரிசனம் திங்களன்று (ஜன.13) நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு அன்று ஒருநாள் மட்டும் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் உள்ளூர் விடுமுறை என அறிவித்து ஆணை யிடப்படுகிறது. அவ்விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 1-2-2025 சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. மேலும், உள்ளூர் விடுமுறை யாக அறிவிக்கப்படும் 13.01.2024 திங்கள் கிழமை அன்று மாவட்ட கருவூலம், சார்நிலை கருவூலங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறைந்தபட்ச பணியாளர்களோடு செயல்படும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரி வித்துள்ளார்.
பொங்கல் சிறப்பு தொகுப்புக்கு பதிலாக தலா ரூ.750 ரொக்கம்
புதுச்சேரி, ஜன. 3 - புதுச்சேரியில் பொங்கல் பண்டிகையை ஒட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பொருட்கள் தொகுப்புக்கு பதிலாக தலா ரூ.750 ரொக்கம் கொடுக்க புதுச்சேரி அரசு முடிவு எடுத்துள்ளது. புதுவை அரசு சார்பில் ஆண்டுதோறும் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கப்படும். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அப்போதைய ஆளுநர் கிரண்பேடிக்கும், அப்போதைய காங்கிரஸ் அரசுக்கும் மோதல் ஏற்பட்டு ரேஷன்கடைகள் மூடப்பட்டது. அதையடுத்து பயனாளிகள் வங்கி கணக்கில் ரேஷன் பொருட்களுக்கு பணம் செலுத்தப்பட்டு வந்தது. 2021-ல் என்ஆர்.காங்கிரஸ்- பாஜக அரசு பொறுப்பேற்றவுடன் 2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, பச்சைப்பருப்பு, கடலைப்பருப்பு உட்பட 10 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. கடந்த 2023ம் ஆண்டு பொங்கல் பொருட்களுக்கு பதிலாக பயனாளிகள் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டது. அதேபோல கடந்த ஆண்டும் பொங்கல் சிறப்பு பொருட்கள் தொகுப்புக்கு பதிலாக அரசு பணம் ரூ. 500-ஐ வழங்கியது. அதன்பிறகு கூடுதலாக ரூ.250 தரப்பட்டது. மொத்தமாக ரூ.750 கடந்த ஆண்டு தரப்பட்டது. கடந்த மக்களவைத் தேர்தலில் படுதோல்வியடைந்த பின்னர் தீபாவளிக்கு ரேஷன்கடைகளை புதுவை அரசு திறந்தது. ரேசன் கடைகளை திறக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்த்து. இதனால் ரேஷன்கடை கள் மூலம் இலவச அரிசி, சர்க்கரை தீபாவளிக்கு தரப்பட்டது. அதைத்தொடர்ந்து மாதந்தோறும் இலவச அரிசியும் 15 நாட்களுக்குள் தரப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். இந்நிலையில் பொங்கல் பண்டிகை வரவுள்ளது. எனவே பொங்கல் தொகுப்பு பொருட்களும் கிடைக்கும் என புதுவை மக்கள் எதிர்பார்த்தனர். தமிழகத்தில் பச்சரிசி, கரும்பு, சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு பொருட்கள் தர நடவடிக்கை எடுக்கப்பட்டு, இதற்காக டோக்கன் வழங்கும் பணியும் நடந்து வருகிறது. ஆனால், புதுச்சேரியில் பொங்கல் தொகுப்புக்கான ஆரம்பக்கட்ட பணிகள் ஏதும் நடக்கவில்லை. பொங்கல் பொருட்கள் வழங்க அரசு திட்டமிட்டாலும், அதற்கு அனுமதி பெற்று டெண்டர் கோரி பொருட்களை பெற்று விநியோகிக்க போதிய கால அவகாசம் இல்லை. தற்போது எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என குடிமைப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் திருமுருகனிடம் கேட்டதற்கு, "இந்த ஆண்டும் பொங்கல் தொகுப்புக்கு பதிலாக பணம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி ரேஷன்கார்டுக்கு தலா ரூ.750 வீதம் பயனாளிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.
தாம்பரம் - திருச்சி சிறப்பு ரயில் தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை, ஜன.3- பொங்கல் பண்டிகை விடுமுறையை ஒட்டி, தாம்பரம் - திருச்சி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகை விடுமுறையை ஒட்டி, தாம்பரம் - திருச்சி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி, ஜனவரி 4, 5, 10, 11, 12, 13, 17, 18, 19ஆம் தேதிகளில் தாம்பரத்தில் இருந்து மாலை 3.30 மணிக்கு ஜன் சதாப்தி சிறப்பு அதி விரைவு ரயில் இயக்கம்; மறு மார்க்கத்தில் திருச்சியில் இருந்து 4, 5, 10, 11, 12, 13, 17, 18, 19 ஆம் தேதிகளில் மாலை 5.35 மணிக்கு சிறப்பு ரயில் தாம்பரத்திற்கு இயக்கப்படுகிறது. ரயில் எண். 06190/06191 திருச்சிராப்பள்ளி – தாம்பரம் – திருச்சிராப்பள்ளி ஜன் சதாப்தி அதிவிரைவு சிறப்பு ரயில்களின் நேரம் மற்றும் நிறுத்தங்கள் விவரம் பின்வருமாறு. திருச்சியில் இருந்து மாலை 5.35 க்கு புறப்படும் இந்த ரயில் திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திரிபாதிரிப்புலியூர், பண்ருட்டி, விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு வழியாக இரவு 12.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். அதேபோல் தாம்பரத்திலிருந்து காலை 11.35 மணிக்கு புறப்பட்டு மாலை 3.30 மணிக்கு திருச்சி சென்றடையும். இவ்வாறு தெற்கு ரயில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தனியார் பள்ளியின் கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி பலி! உறவினர்கள் சாலை மறியல்
விழுப்புரம்,ஜன.3- விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் உள்ள கழிவுநீர் தொட்டியில் விழுந்து மூன்றரை வயது குழந்தை உயிரிழந்தது. விக்கிரவாண்டி பகுதியில் உள்ள செயிண்ட் மேரீஸ் என்ற தனியார் பள்ளியில் சிறுமி லியா லெட்சுமி யுகேஜி படித்து வந்தார். இந்நிலையில் வெள்ளியன்று பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி கழிவுநீர் தொட்டியில் விழுந்து பரிதாபமாக பலியானார். குழந்தை பலியான சம்பவத்தால் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் குழந்தை உயிரிழப்புக்கு நீதி கேட்டும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
திருவொற்றியூர் 9ஆவது வார்டில் வயிற்றுப்போக்கால் பெண் பலி! நிவாரணம் வழங்க மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை
சென்னை, ஜன. 3- வயிற்றுப்போக்கால் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் திரு வொற்றியூர் 9ஆவது வார்டில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் உரிய மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து கட்சியின் வடசென்னை மாவட்டச்செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: திருவொற்றியூர் மயானத்தில் குப்பை கள் குவிந்து, கழிவுநீர் தேங்கி நிற்கிறது. அதே போல் கடற்கரை ஒட்டி உள்ள தெருக்களில் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி காய்ச்சல் உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படுவதாகவும் இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. இந்நிலையில் டிச 29ஆம் தேதி திரு வொற்றியூர் மயானத்திற்கு பின்புறம் உள்ள அப்பர் நகர் பகுதியில் ஒரே தெருவில் பத்துக்கும் மேற்பட்டோருக்கு வாந்தி மற்றும் கடுமையான வயிற்றுப் போக்கு ஏற்பட்டு, அருகில் உள்ள திரு வொற்றியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டும் வயிற்றுப் போக்கு சரியாகாததால் மேல் சிகிச்சைக்காக தண்டையார்பேட்டை காலரா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். அதில் 5 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது வரை 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் தேசப்பட்டு என்ற பெண்ணின் உடல் நிலை மோசமடைந்ததை அடுத்து ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கடந்த 6 நாட்களாக வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்ட பிரச்சனைகளால் அவ திப்பட்டு வந்த நிலையில், ஒரு உயிரிழப்பு ஏற்பட்டவுடன், மாநகராட்சி அதிகாரிகள், 30க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் அந்தப் பகுதியை சுத்தம் செய்யும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கையை முன்பே எடுத்திருந்தால் இந்த உயிரிழப்பை தடுத்திருக்க முடியும். அந்த பகுதியை தூய்மை செய்தால் மட்டும் போதாது, அங்கு வசிக்கும் அனைவருக்கும் முழுமையான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். உயிரிழந்த குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆட்சியர் அலுவலகம் முன்பு தொழிலாளி தீக்குளிப்பு
செங்கல்பட்டு ,ஜன.3- திரிசூலம் வைத்தியர் தெருவை சேர்ந்தவர் பாபு (வயது45). தொழிலாளி. இவருக்கும் பக்கத்தில் வீட்டில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் இடையே இடம் தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் அவர்கள் கொலை மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஏற்கெனவே பல்லாவரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இருதரப்பினரையும் அழைத்து சமாதானம் பேசி அனுப்பி உள்ளனர். இந்த நிலையில் பாபுவுக்கு மீண்டும் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் மிரட்டல் விடுத்தாக தெரிகிறது. இது தொடர்பாக அவர் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் புகார் தெரிவித்து இருந்தார். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மனமுடைந்த பாபு வெள்ளியன்று செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார். இதில் உடல் கருகிய அவரை அங்கிருந்த சிலர் மீட்டு அவரை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.