districts

ஐசிஎப் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு  ரயில்வே அமைச்சர் உத்தரவு

சென்னை, மே 20- தொழிற்சங்கங்களின் கோரிக்கையை ஏற்று ஐசிஎப் மருத்துவமனையில் உடனே தீவிர சிகிச்சை பிரிவு அமைக்க  அமைச்சர் உத்தரவிட்டார். மத்திய ரயில்வே மற்றும் தகவல் தொடர்பு, மின்னணுவி யல், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சென்னை ஐசிஎப்பில் தயாராகும் வந்தே பாரத்  ரயில் பெட்டிகளை வெள்ளியன்று (மே 20) பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்தித்தார். அப்போது ஐசிஎப் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு  சார்பில் அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், உற்பத்தி கேந்திரங்களை கார்ப்பரேஷனாக மாற்றும்  முயற்சியை கைவிடுவதாக நாடாளுமன்றத்தில் அளித்த உறுதிமொழியை வரவேற்கிறோம். அதை உறுதியாக அமல்படுத்த வேண்டும். வந்தே பாரத் ரயில் உற்பத்திகள் அனைத்தும் ஐசிஎப் நிறுவனத்திலேயே தயாரிக்க வேண்டும்,  எக்காரணம் கொண்டும் தனியாருக்கு வழங்கக்  கூடாது. குரூப் 4 காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். நிலுவையில் உள்ள பதவி உயர்வுகளை வழங்க வேண்டும்.  நிலுவையில் உள்ள மேற்பார்வையாளர் பதவி உயர்வுகளை  வழங்க வேண்டும். ஐ.சி.எப்.மருத்துவமனையில் முழு வசதியுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவு (ஐசியு) அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தன. மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். மேலும் ஐசிஎப் மருத்துவமனையில் உடனே தீவிர சிகிச்சை பிரிவு அமைக்க உத்தரவிட்டார்.