districts

img

மாநகராட்சி மேயரை தேர்ந்தெடுக்க மார்ச் 4 ஆம் தேதி மறைமுக தேர்தல்

மாநகராட்சி மேயரை தேர்ந்தெடுக்க மார்ச் 4 ஆம் தேதி மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், மார்ச் 4 ஆம் தேதி மாநகராட்சியின் மேயரை மறைமுக தேர்தல் மூலம் தேர்ந்தெடுப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்ற நகர்ப்புற தேர்தலில் 50 சதவிகிதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டது. சென்னை, தாம்பரம் உள்ளிட்ட 11 மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 2 பெண்கள் சென்னை மேயர் பதவியை அலங்கரித்துள்ளனர். 1957 ஆம் ஆண்டு தாரா செரியன் என்பவர் சென்னை மாநகராட்சியின் முதல் மேயாராக பொறுப்பேற்று, இந்தியாவின் முதல் பெண் மேயர் என்ற பெருமையை பெற்றார். 1958 ஆம் ஆண்டு வரை மேயராக இருந்த இவருக்கு, 1967 ஆம் ஆண்டில் ஒன்றிய அரசின் பத்ம பூஷன் வழங்கப்பட்டது. இரண்டாவது பெண் மேயராக 1971 ஆம் ஆண்டில் திமுகவைச் சேர்ந்த காமாட்சி ஜெயராமன் பொறுப்பு வகித்தார்.

இந்நிலையில், தற்போது நடைபெற்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால், திமுகவைச் சேர்ந்தவர் 3 ஆவது மேயராக பொறுப்பேற்க உள்ளார். மேலும், சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை பட்டியல் இனத்தைச் சேர்ந்த முதல் பெண் மேயர் என்ற பெருமையையும், பதவி ஏற்பவரையேச் சாரும்.