வேலூர், மார்ச் 29 - வேலூர் மாவட்டத்தில் 100 குழுக்கள் ஒரு லட்சம் வீடுகளில் உள்ள வாக்காளர்களை சந்திக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. சிபிஎம் வேலூர் - திருப்பத்தூர் மாவட்டக்குழு கூட்டம் வேலூரில் பி.காத்த வராயன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி கூறியதாவது, வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் து.மு.கதிர் ஆனந்த், திருவண்ணாமலை தொகுதி வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை, அரக்கோணம் தொகுதி வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோர் வெற்றிக்கு முழுமையாக பாடுபடுவது என முடிவு செய்யப்பட்டது. இதற்காக வீடு வீடாக வாக்காளர்களை சந்தித்து பேசுவது, திண்ணைப் பிரச்சாரம் மேற்கொள்வது. 10 நாட்கள்,100 குழுக்கள்,ஒரு லட்சம் குடும்பங்களை சந்தித்து பிரச்சாரம் செய்வது என முடிவு செய்யப்பட்டது. சட்டமன்ற தொகுதிக்கு மூன்று நாட்கள் வாகனப் பிரச்சாரம் மூலம் அரசியல் பிரச்சாரத்தை முன்னெடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது.