districts

img

திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் கிராம அளவில் குழுக்களை அமைத்து, வாக்கு சேகரிக்க இந்தியா கூட்டணி முடிவு

திருவள்ளூர், மார்ச் 22- திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி முழுவதும் கிராம அளவில் குழுக்களை அமைத்து, வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளது. திருவள்ளூரில் வியாழனன்று (மார்ச் 21), நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு திமுக மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.சந்திரன். எம் எல் ஏ, தலைமை தாங்கினார். இதில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன்.எம்எல்ஏ, தலைமை கழக செயற்குழு உறுப்பினர் பூபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், சிபிஐ மாவட்டச் செயலாளர் கஜேந்திரன், விசிக  மாவட்டச் செயலாளர் தளபதி சுந்தர், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் மூர்த்தி, மதிமுக மாவட்ட செயலாளர் பாபு, மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகி நூர் முஹம்மது, திக மாவட்ட தலைவர் மா.மணி,  திமுக நகர செயலாளர் சி.சு.மணி ஆகியோர் பேசினர். கூட்டத்தில் பேசிய கூட்டணி கட்சித்தலைவர்கள், ஒன்றிணைந்து கிராம அளவில் சிறுசிறு குழுக்களை  அமைத்து வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட வேண்டும், சமூக வலைதளத்தை பயன்படுத்த வேண்டும். முதல் முறையாக வாக்களிக்க உள்ள இளைஞர்களை வென்றெடுக்கும் வகையில் பிரச்சாரம் மேற்கொள்வது. குறிப்பாக இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள சமூகநீதி, மதச்சார்பின்மை, ஜனநாயகம், கூட்டாட்சி கோட்பாடு ஆகியவற்றுக்கு    மோடி ஆட்சியில் ஏற்பட்டுள்ள  ஆபத்தை மக்களிடம் எடுத்துச் சொல்லி வாக்குகளை சேகரிக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருக்கு கை சின்னத்திற்கும், அரக்கோணம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனுக்கு உதயசூரியன் சின்னத்திற்கும் வாக்குகளை சேகரிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.