ராணிப்பேட்டை, டிச. 15 – வாலாஜா வட்டத்தில் உள்ள நவ்லாக் ஊராட்சி, சிப்காட் காமராஜர் நகர் பகுதி 5-வது தெருவில் 300க்கும் மேற்பட்ட குடும்பம் உள்ளது. இந்த தெருவில் உள்ள சிமெண்ட் சாலை குண்டும் குழியுமாக சேதமடைந்துள்ளது. மேலும், கழிவு நீர் கால்வாய் இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்கியுள்ளது. சேதமடைந்தும் சுகாதாரமற்று உள்ள இந்தச் சாலையைதான் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, புதியதாக சிமெண்ட் சாலை அமைப்பதுடன் கழிவு நீர் கால்வாய் அமைத்து கொடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.