districts

img

காசிமேடு மார்க்கெட்டில் மீன் விலை 2 மடங்கு உயர்வு

சென்னை, ஏப்.17 - மீன்பிடி தடைக்காலம், மீன் வரத்து குறைவு உள்ளிட்ட காரணங்களால் மீன் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது. விசைப் படகுகள் மூலம் ஆழ்கடலில் இருந்து பிடித்து வரப்படும் மீன்கள், காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலேயே ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்படும். இதனால் அனைத்து வகையான மீன்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் என்பதால் மீன் பிரியர்கள் காசிமேட்டில் குவிவார்கள். இதன்காரணமாக காசிமேடு மீன் சந்தைகளில் வார விடுமுறை தினத்தில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்நிலையில் ஏப்.15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் என்பதால் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. ஏற்கனவே சென்று வந்த விசைப்படகு மீனவர்கள் பிடித்து வந்த மீன்களை பதப்படுத்தி ஞாயிற்றுக்கிழமை விற்பனை செய்தனர். மீன்வரத்து இல்லாததால் அதிக விலைக்கு மீன்கள் விற்கப்பட்டது. காசிமேடு மீன் சந்தையில் சிறிய வகை வஞ்சிரம் 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் ஞாயிறன்று ரூ.1,200க்கு விற்பனை செய்யப்பட்டது. பெரிய வகை வஞ்சிரம் 1,300 ரூபாயிலிருந்து 1,800 ரூபாய் வரையும், சங்கரா 400 ரூபாயிலிருந்து 650 ரூபாயாகவும், நெத்திலி 400 ரூபாயிலிருந்து 700 ரூபாயாகவும், வவ்வால் 700 ரூபாயிலிருந்து 1,200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டன. 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கடம்பா  800 ரூபாய்க்கும், 500 ரூபாய்க்கு விற்ற இறால் 650 ரூபாய்க்கும், 700 ரூபாய்க்கு விற்கப்பட்ட பாறை 1000 ரூபாய்க்கும், 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நண்டு 650 ரூபாய்க்கும், 550 ரூபாய்க்கு விற்ற கொடுவா 750 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.