விழுப்புரம்,செப்.16- விழுப்புரம் மாவட்டம்,மேல்மலையனூர் அருகே கன்னலம், இரும்புலி ஆகிய கிராமங்களில் கடந்த மாதத்தில் பூட்டிய வீடுகளை உடைத்தும், கத்தியைக் காட்டி மிரட்டியும் தொடர் கொள்ளையில் மர்ம நபர்கள் ஈடுபட்டிருந்தனர். இதுகுறித்து வளத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். காவல் நிலைய ஆய்வாளர் செந்தில் குமார் தலைமையில் தனிப்படை அமைத்து மர்மநபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் போலீசார் அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அன்னமங்க லம் கூட்டு சாலையில் நின்றிருந்த 3 பேரை பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். இதையடுத்து 3 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், பூங்குணம் கிராமத்தைச் சேர்ந்த கலியன் மகன் ரமேஷ் (வயது 51), காட்டுக்கூடலூர் கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சி மகன் பெருமாள் (25), காஞ்சிபுரம் மாவட்டம் ஊரப்பாக்கம் கிராமத் தைச் சேர்ந்த தண்டபாணி மகன் தமிழ்ச் செல்வன் (25) என்பது தெரியவந்தது. இந்த 3 பேரும் சேர்ந்து கன்னலம், இரும்புலி ஆகிய கிராமங்களில் வீடு புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக 3 பேரையும் கைது செய்த வளத்தி போலீசார், வேறெங்கெல்லாம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர் என்பது குறித்தும், தற்போது எதற்காக ஒன்று கூடினார்கள் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.