விழுப்புரம்,ஆக.12-
விழுப்புரம் மாவட்டத்தில் சுதந்திர தினத்தை யொட்டி நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என ஆட்சியர் பழனி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:-
விழுப்புரம் மாவட்டத்தில் 688 கிராம ஊராட்சிகளிலும் வருகிற 15 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) சுதந்திர தினத்தன்று ஊராட்சி மன்றத் தலைவர்களால் கொடியேற்றப்பட்டு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல், அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துதல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் குறித்து விவாதம் நடக்கிறது.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், குழந்தை பாதுகாப்பு திட்டம் ஆகிய பொருட்கள் பற்றியும் விவாதிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.