districts

img

சொந்த மண்ணில் அகதிகளாக வாழும் இருளர் இன மக்கள்

திருவள்ளூர், செப் 9- பூண்டி நீர்த்தேக்கம் அருகே வசிக்கும் இருளர் இன மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது திருவள்ளூர் மாவட்டம், பூண்டி அருகில் உள்ள குன்னவளம் ஊராட்சிக் குட்பட்ட குப்பத்து பாளையம். இங்கு 25க்கும் மேற்பட்ட இருளர் இனத்தைச் சேர்ந்த குடும்பங்கள் நீண்ட காலமாக வசித்து வருகின்றனர். இந்த மக்களுக்கு குடிமனைப்பட்டா வழங்கப்படவில்லை. மின்சாரம், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட எந்த  அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கவில்லை. அகதிகளைப் போல சொந்த மண்ணில் வாழும் அவலம் தொடர்கிறது. அந்த பகுதி மக்களுக்கு பாது காக்கப்பட்ட குடிநீர் வழங்க வலி யுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. பிறகு,  ஊராட்சி மன்ற நிர்வாகம் குழாய் மூலம்  குடிநீர் வழங்கி வந்தது. அதுவும் இரண்டு நாளைக்கு ஒரு முறைதான். அதுவும் ஒரு வாரமாக குடிநீர் மோட்டார் பழுது அடைந்து உள்ள தாகக் கூறப்படுகிறது. இதனால் குடிநீர் கிடைக்காமல் இருளர் தவித்து வருகின்றனர். குடங்களுடன் விவசாய நிலங்களை தேடி அலைகின்றனர். இதுகுறித்து பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம்  முறையிட்டும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.'

இந்த சூழலில் குடும்பத் திற்கு 150 ரூபாய் வசூலித்து ஒரு டேங்கரில் தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்தனர். உள்ளூர் பிரமுகர் ரமேஷ் என்பவர் பணமெல்லாம் வேண்டாம் என இலவசமாக ஒரு டேங்கர் தண்ணீர் வழங்கியுள்ளார். அதைத்தான் தற்போது பயன்படுத்தி வருகிறோம் என்று கூறுகிறார்கள். இதுகுறித்து மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழ்அரசன் கூறுகையில், பழங்குடி இன மக்கள் வாழும் மக்களை சுற்றி இருக்கும் மற்ற மக்கள்  காலையில் எழுந்து தங்கள் அன்றாட  பணிகளை கவனித்து வருகின்றனர். ஆனால் பழங்குடி இன மக்கள் இன்னும் குடிமனை பட்டா, தொகுப்பு  வீடுகள், மின்சாரம் மற்றும் குடி நீருக்கே தினசரி போராட வேண்டி யுள்ளது. இதே நிலைதான் திருவள்ளூர்  மாவட்டம் முழுவதும் உள்ள பழங்குடி யினர் நிலையாக உள்ளது. முதலில் குப்பத்து பாளையத்திற்கு தினம் இரண்டு வேளை குடிநீர் வழங்க  ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பூண்டி நீர்த்தேக்கம் உள்ள பகுதியில் குடிக்க தண்ணீர் காசு கொடுத்து வாங்குவது மாவட்ட நிர்வாகத்திற்கு தான் அவமானம். எனவே இந்த பகுதி மக்களுக்கு தினசரி குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.