சென்னை, ஆக. 8-
நெய்வேலியில் சுற்றியுள்ள கிராமங்க ளில் குறிப்பிட்ட ஒரு கிராமத்தில் நிலத்தடி நீரில் 250 மடங்கு அதிகமாக பாதரசம் கலந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெய்வேலியில் என்.எல்.சி. நிறு வனத்தால் மேற்கொள்ளப்படும் அனல்மின் நிலையம் மற்றும் சுரங்கச் செயல்பாடுகளால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் சீர்கேடுகள் குறித்துப் பூவுலகின் நண்பர்கள் தயாரித்துள்ள “மின்சாரத்தின் இருண்ட முகம்” எனும் ஆய்வறிக்கை சென்னையில் செவ்வாயன்று (ஆக. 8) வெளியிடப்பட்டது.
இதில் மனித நேய மக்கள் கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் எம்எல்ஏ, விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு சுல்தான் இஸ்மாயில் (மண் உயிரியலாளர்), கோ.சுந்தர்ராஜன் (பூவுலகின் நண்பர்கள்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அறிக்கையை வெளியிட்டனர்.
பூவுலகின் நண்பர்கள், மந்தன் அத்தியாயன் கேந்திரா ஆகிய சூழலியல் ஆர்வலர்கள் இணைந்து நடத்திய ஆய்வு, 2022 தொடங்கி 2023 ஏப்ரல் வரை நடைபெற்றது. ஆதண்டார் கொல்லை, அகிலாண்ட கங்காபுரம், கல்லுக்குழி, தென்குத்து வானதிராயபுரம், வடக்கு வெள்ளூர், புது குப்பம் ஆகிய கிராமங்களில் 121 வீடுகளில் நேரடியாக நேர்காணல் செய்து பதில்களை பெற்று இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
அதன் முடிவில் என்எல்சி-யை சுற்றியுள்ள 31 இடங்களில் 17 இடங்கள் மிகக் கடுமையாக மாசடைந்திருப்பதும் 11 இடங்கள் குறிப்பிடத்தக்க அளவு மாசடைந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.குறிப்பாக என்எல்சி-ன் 9ஆவது சுரங்கத்திற்கு அருகே உள்ள வடக்கு வெள்ளூர் கிராமத்தில் தொல்காப்பியர் நகரில் எடுக்கப்பட்ட நிலத்தடி நீரில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பாதரசத்தின் அளவு அதிகமாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் பரங்கிப்பேட்டையில் ஐடிபிசிஎல் நடத்தி வரும் அனல் மின் நிலையத்திற்கு அருகே 2 கிராமங்களில் எடுக்கப்பட்ட நீர் மற்றும் மண் மாதிரிகளில் மூன்று இடங்கள் தீவிரமாக பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. மண் மாதிரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 30 மடங்கு போரான் அளவு அதிகமாக இருக்கிறது. அனல் மின் நிலையத்தில் உள்ள கழிவுகளில் இருந்து இந்த போரான் வந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இதனால் இந்த பகுதிகளில் விவசாயம் செய்ய முடியாத அளவிற்கு மண் தரம் மாறியுள்ளது. நீரில் மெக்னீசியம், சிலிக்கான், கடினத்தன்மை காரத்தன்மை போன்றவை அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக உள்ளதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், மக்களை பற்றி கவலை கொள்ளாத நிறுவனமாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளது. இதே நிலைமை நீடித்தால் ஒட்டு மொத்த டெல்டாவும் பாதிப்படையும் என்று அவர் கூறினார்.