சென்னை, ஜூன் 4- நாட்டின் பல்வேறு பகுதிகளில் நீடித்து வரும் அதிக வெப்பநிலையால் அதிகரித்து வரும் மின் தேவையை கருத்தில் கொண்டு, அதிகளவில் நிலக்கரி உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மத்திய நிலக்கரி, சுரங்கங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறினார். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்.எல்.சி) சுரங்கப் பணிகளை ஆய்வு செய்த பின்னர் அவர் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிக வெப்பநிலையால் கடந்த சில மாதங்களாக மின்நுகர்வு அதிகரித்து வருகிறது. இதை சமாளிக்க ஏதுவாக, தடையற்ற மின் உற்பத்தியை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு எடுத்து வருகிறது என்றார். 2040ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் மின் உற்பத்தி, சுமார் 3000 பில்லியன் யூனிட்டுகளாக இருக்கும். அதேநேரம் இந்தியாவின் எரிசக்தி தேவை இரண்டு மடங்காக இருக்கும் என்றும், இந்தத் தேவையை பூர்த்தி செய்ய 2040க்குள், அனல் மின் நிலையங்களுக்கான நிலக்கரி தேவை, சுமார் 1500 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார். நமது நிலையான சுரங்க இலக்குகளை மனதில் கொள்ள வேண்டிய நிலையில், சுற்றுச்சூழலை பாதுகாப்பது பற்றியும், நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். மேலும், நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரியை சார்ந்திருப்பதை, மரபுசாரா எரிசக்தி மூலங்களின் வளர்ச்சியுடன் சமநிலைப்படுத்த முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம்.
எனினும், மரபுசாரா எரிசக்திக்கான நமது மாற்றம், பெரும்பாலும் படிப்படியாகத்தான் இருக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார். கடந்த 8 ஆண்டுகளில், என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மின் உற்பத்தித் திறன் 2,740 மெகாவாட்டிலிருந்து 6,061 மெகாவாட்டாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. மேலும், சுரங்கத்தின் திறன் ஆண்டிற்கு 30.60 மில்லியன் டன்னிலிருந்து 50.60 மில்லியன் டன்னாக உயர்த்தப்பட்டுள்ளது. என்எல்சிஐஎல், அதன் உற்பத்தித் திறனில் 45 விழுக்காட்டுற்கும் மேல் அனல் மின்சக்தி மற்றும் அதன் முழு மரபுசாரா மின்சக்தி உற்பத்தியை தமிழகத்திற்கு வழங்கி வருகிறது. இந்தியாவில் 1 ஜிகா வாட் திறனுடைய, சூரிய மின் நிலையத்தை நிறுவிய முதல் மத்திய பொதுத்துறை நிறுவனம், என்கிற பெருமையை, என்எல்சி இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது என்றும் அமைச்சர் பிரகலாத் ஜோஷி பாராட்டினார்.