districts

img

காஞ்சிபுரத்திற்கு அரசு மருத்துவக்கல்லூரி அவசியம்

தொல்லியல் சார்ந்த பல்வேறு வரலாற்று சிறப்புகளை கொண்டதும் கோவில்கள் நிறைந்தது காஞ்சிபுரம் மாவட்டம்.  பட்டுத்துணி என்றாலே உலக அளவில் நினைவில் கொள்ள வேண்டிய நகரமாக காஞ்சிபுரம் உள்ளது என்றால் அது மிகையாகாது.  இத்தனை  சிறப்புகளை பாதுகாப்பதோடு மேலும் பல சிறப்புகளை உருவாக்குவதற்காக  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களத்தில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறது. ஒன்றுபட்ட காஞ்சிபுரம் மாவட்டம்  நிர்வாக வசதிக்காக  2019 ஆம் ஆண்டு காஞ்சிபுரம், செங்கல்பட்டு என இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது.  இதில் காஞ்சிபுரம் பன்னாட்டு கார்  தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டமாக உருமாறியுள்ளது.   காஞ்சிபுரம் அண்ணா பிறந்த இடம். அவரது  காலத்தில் தான் செங்கல்பட்டு மாவட்ட தலை நகரமாக காஞ்சிபுரம் திகழந்தது.  மாவட்டத்திற்கு ஒரு அரசு மருத்துவக் கல்லூரி என்ற அரசின் நிலைப்படி ஒன்றுபட்ட செங்கல்பட்டு மாவட்டத்திற்கு அரசு மருத்துவக் கல்லூரி இருந்தது.

தற்போது செங்கல்பட்டு- காஞ்சிபுரம் வருவாய் மாவட்டங்களாக பிரிக்கப்பட்ட நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி இல்லாத நிலை உள்ளது. அரியலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் துவக்க விழாவில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி  அம்மாவட்டங்களுக்கு அரசு மருத்துவ கல்லூரி அமைக்க ஒப்புதல் அளித்தார். ஆனால், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு அறிவிக்கப்படவில்லை. எனவே காஞ்சிபுரத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை தற்போதைய தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.  

அதே நேரத்தில், காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தை நவீன முறையில்  மேம்படுத்தவும் அங்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு கூடுதலாக  அடிப்படை  வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  காஞ்சிபுரம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை எட்டு வழிச் சாலையாக மாறிக் கொண்டிருக்கும் நிலையில்,  அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்படும் மாவட்டமாக காஞ்சிபுரம் உள்ளதால் நவீன சாதனங்களுடன் விபத்து கால சிகிச்சை மையத்தை ஏற்படுத்த வேண்டும்.  மேலும் காஞ்சிபுரத்தில் புதிய மருத்துவ கல்லூரி அமைகின்ற போது உரிய நேரத்தில் சிகிச்சை அளித்து விலைமதிப்பற்ற பல உயிர்களை காப்பாற்ற முடியும்.  மீண்டும் ரயில்சேவையை துவக்குக காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்கு பணி நிமித்தமாக பொது மக்கள், சிறு வியாபாரிகள் அன்றாடம் ரயில் மூலம்  பயணம்  மேற்கொள்கின்றனர். ஊரடங்கு காலத்தில்  நிறுத்தப்பட்ட ரயில்கள்  தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் இயக்கப்பட வில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி இந்த ரயில்களை இயக்க வேண்டும்.  புதுச்சேரியில் இருந்து  திருப்பதிக்கு காஞ்சிபுரம் வழியாக இயக்கப்படும் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். விவசாயமே பிரதானம்...

இயற்கை வளங்கள் நிறைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  விவசாயிகளின் கோரிக்கைகள் ஏராளமாக உள்ளன. விவசாயத்திற்கு தேவையான உரம், பூச்சிகொல்லி மருந்து, இடு பொருட்களை மாவட்ட நிர்வாகம் முறைகேடு இல்லாமல் வழங்குவதற்கு  நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது பெய்த கடும் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு  நிவாரணம் வழங்க வேண்டும். பன்நோக்கு மருத்துவமனை திருப்பெரும்புதூரில் உள்ள  பன்னாட்டு தொழிற்சாலைகளில் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தொழிலாளர்களுக்கு விபத்து ஏற்பட்டால் அவர்களுக்கு உடனடியாக  சிகிச்சை அளிக்க ஏற்பாடு இல்லை.  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செல்போன் தயாரிப்பு ஆலையில் பெண் தொழிலாளி ஒருவர்  பணியின்போது இயந்திரத்திற்குள் கை சிக்கியதால் உயிரிழந்தார்.

எனவே தொழிலாளர்களின் உயிர் இழப்பை தடுக்க  திருபெரும்புதூரில் அரசு பன்நோக்கு மருத்துவமனையை  அமைக்க வேண்டும்.  பாலாற்று பாலம் வாலாஜாபாத் பகுதியில்  1950 இல் அடிக்கல் நாட்டப்பட்டு 1954ல்  பாலாற்று பாலம் திறக்கப்பட்டது. தற்போது பெய்த மழையால்  அந்த பாலம் முழுமையாக சேதமடைந்துள்ளது. எனவே பொதுமக்கள்,  பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதுகாப்புடன் சென்று வர தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் புதிதாக மேம்பாலம் அமைக்க கொடுக்க வேண்டியது அவசியமாகும்.  இத்தகைய சூழ்நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட மக்களின்  அடிப்படை தேவைகளை வலியுறுத்தி டிச. 16, 17  ஆகிய தேதிகளில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  23 ஆவது மாவட்ட மாநாடு காஞ்சிபுரத்தில் நடைபெறுகிறது. நீராதாரம், இயற்கை வளம், தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்க தொடர்ந்து போராடவும் மாவட்டத்தில் கட்சியை வலுப்படுத்த எதிர்கால செயல்திட்டங்களை வகுக்கவும் இந்த மாநாடு நடைபெறுகிறது. இம் மாநாட்டில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானங்களை கோரிக்கை வடிவமாக்கி அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்ற தொடர் இயக்கங்களை முன்னெடுக்கவும் இந்த மாநாடு நடைபெறுகிறது.

சி.சங்கர்  சிபிஐ(எம்) மாவட்டச் செயலாளர்