districts

சென்னை முக்கிய செய்திகள்

உடல் உறுப்புகள் தானம்: தொழிலாளிக்கு அரசு மரியாதை

சென்னை, ஜூலை 29- பூந்தமல்லி, கரையான்சாவடி முருகேசன் தெருவை சேர்ந்தவர் துரைமுருகன் பாபு (37). இவருக்கு மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.  கார் கம்பெனியில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வந்த துரைமுருகன் பாபு, கடந்த 20ம் தேதி வீட்டின்  2வது மாடியில் இருந்து கால் தவறி கீழே விழுந்து படுகாய மடைந்தார். அவரை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி துரைமுருகன் சனிக்கிழமை யன்று மூளைச்சாவு அடைந்தாக மருத்துவர்கள் அறிவித்தனர். அதன்பேரில் இறந்த துரைமுருகன் பாபுவின்  உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அதன் பேரில்  துரைமுருகன் பாபுவின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தும் விதமாக திருவள்ளூர் கோட்டாட்சியர் ஏ.கற்பகம், பூந்தமல்லி வட்டாட்சியர் ரா.கோவிந்தராஜ் ஆகி யோர் நேரில் சென்று தமிழ்நாடு அரசின் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். மேலும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

பழங்குடியினர் சாதிச்சான்றிதழ் பிரச்சனை: உயர்நீதிமன்றத்தில்  ஆட்சியர் ஆஜராக உத்தரவு  

திருவண்ணாமலை, ஜூலை 29- பட்டியல் பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் வழங்காத வழக்கில் திருவண்ணாமலை  ஆட்சியர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென சென்னை  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு விண்ணப்பதாரரின் இரத்த உறவினர்களுக்கு வழங்கப்பட்ட சமூகச் சான்றிதழ்களை பின்பற்றி மற்றவர்களுக்கும் சமுகச் சான்றிதழ் வழங்க வேண்டுமென நீதித்துறை அறிவுறுத்தியும் சான்றிதழ் வழங்கப்படுவதில்லை. இந்த நிலையில் பட்டியல் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இரத்த உறவினர்களுக்கு சமூகச் சான்றிதழ் வழங்குவதில் வருவாய்த்துறை அதிகாரிகள்  மாறுபட்ட முடிவை எடுத்துள்ளனர். இது தொடர்பான பிரச்சனையில் திருவண்ணாமலை ஆட்சியர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆக.22-ஆம் தேதி ஆஜராகவேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர்.

உடல் எடை குறைப்பு மையம் நடத்திய 4 பேர் கைது

கிருஷ்ணகிரி, ஜூலை 29- கோ-ஆப்ரேட்டிவ் காலனியில் ‘வெல்னஸ் சென்டர்’ உடல் எடை குறைப்பு மையம் இயங்கி வருகிறது. இங்கு மருத்துவம் படிக்காதவர், வாடிக்கையாளர்களுக்கு மருத்துவம் மற்றும் நீராகாரம் சார்ந்த மருந்து கொடுப்பதாகவும் அதிக அளவில் கட்டணம் வசூலிப்பதாகவும்  புகார் எழுந்தது.  இது குறித்து பர்கூர் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர் உமா மகேஸ்வரி கிருஷ்ணகிரி நகர காவல் துறைக்கும்,மாவட்ட ஆட்சியருக்கும் புகாரளித்தார். அதனடிப்படையில் கிருஷ்ணகிரி நகர காவல் துறையினர் உடல் எடை குறைப்பு மையம் நடத்திய ராம்பிரபு (42), முத்து, ரகுபதி, 29 வயது ஜீவா ஆகியோரை கைது செய்தனர்.

கழிவறையில் 12 கிலோ கஞ்சா:  சூளகிரி அருகே 2 பேர் கைது

கிருஷ்ணகிரி,ஜூலை 29- சூளகிரி அருகே ராமச்சந்திரம் கிராமத்தில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக தெரிய வந்த நிலையில் அட்கோ துணை காவல் ஆய்வாளர் சபரிவேலன் தலைமையில் ஆய்வு நடைபெற்றது.  கணேஷ் என்பவரது வீட்டின் கழிவறையில் 12 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  அதை பறிமுதல் செய்து கணேஷையும் கைது செய்து பேரிகை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.   தொடர் விசாரணையில் இதில் தொடர்புடைய கொத்தூரை சேர்ந்த பட்டாபிராமனையும் கைது செய்து விசாரித்தனர்.  அதில் கடந்த 6 மாதமாக மஞ்சு என்பவர் மூலம் விஜயவாடா அருகே உள்ள அண்ண வர்மா பகுதியிலி ருந்து கஞ்சா வாங்கி வந்து அவர்கள் சொல்லும் ஆட்களுக்கு விற்று வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

போக்குவரத்து கழகம் தனியார்மயமாகாது! அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேட்டி

கடலூர், ஜூலை 29-  அரசு போக்குவரத்து கழகம் தனியார் மயமாக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவதூறு பரப்பி வரும் நிலையில், எக்காரணத்தை கொண்டும் தனியார் மயமாக்கப்படாது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். கடலூரில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது, எக்காரணத்தை கொண்டும் போக்கு வரத்து துறை தனியார் மயமாகது. முதல மைச்சரின் உத்தரவின்பேரில் தற்போது 7,200 பேருந்துகள் புதிதாக வாங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதில் முதல் கட்டமாக ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டங்களாக இயக்கப்பட்டு வருகிறது” என்றார். ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் இடைப்பட்ட காலத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிய பின்பு அவர்கள் நீக்கப்படுவார்கள் என்றும் போக்குவரத்து துறை தனியார் மயமாக்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் ஒரு மாதத்திற்கு முன்பு அறிக்கை விடுத்த னர். போக்குவரத்துத் துறையில் தனியார் மயமாக்கல் என்பது முற்றிலும் கிடையாது என்றும் அவர் தெரிவித்தார்.