districts

அஞ்சல் நிலையங்களில் தங்கப்பத்திரம் விற்பனை

சென்னை, மார்ச் 1 - இந்திய ரிசர்வ் வங்கி மூலம் வெளியிடப்படும் ஒன்றிய அரசின் தங்கப் பத்திரங்கள் விற்பனை அஞ்சல் நிலையங்களில் வரும் மார்ச் 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுகுறித்து சென்னை மத்திய கோட்ட முதுநிலை  அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் மேஜர் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்சென்னை மத்திய கோட்டத்தில் உள்ள தி.நகர் தலைமை அஞ்சல் நிலையம், மயிலாப்பூர் தலைமை அஞ்சல் நிலையம் மற்றும் 22 துணை அஞ்சல் நிலையங்களில் தங்கப்பத்திர விற்பனை நடைபெறுகிறது. இது பத்திர வடிவில் இருப்பதால் பாதுகாப்பாக இருப்ப துடன், தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்க ளுக்கு மிகச் சிறந்த வாய்ப்பாக அமையும் என்று கூறியுள்ளார். ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,109 ஆகும். ஒருவர் ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக 4 கிலோ வரை தங்கம் வாங்கலாம். மேலும் முதலீட்டு தொகைக்கு 2.5 சதவீத வட்டி 6 மாதத்திற்கு ஒரு முறை முதலீட்டாளரின் வங்கிக் கணக்கில் செலுத்தப் படும். 5 ஆண்டுகள் முடிந்தவுடன் முதலீட்டை திரும்ப  பெற்றுக் கொள்ளலாம். 8 ஆண்டுகள் கழித்து முதிர்வடையும் நாளில் அன்றுள்ள தங்கத்தின் விலைக்கு நிகரான பணம் கிடைக்கும். இதற்கு விண்ணப்பிக்க நிரந்தர கணக்கு அட்டை (பான் கார்டு) அவசியமாகும். ஆதார் அட்டை,  வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் நகல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகிய வற்றுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அஞ்சல்  நிலையத்தில் கொடுத்து தங்கப்பத்திரம் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.