சென்னை, மார்ச் 11- வில்லிவாக்கம் ஏரி பகுதியை சுற்றுலா தலமாக மாற்ற திட்டம் வகுக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக பணிகள் நடந்து வருகிறது. 27.5 ஏக்கர் பரப்பளவில் பூங்கா உருவாகிறது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஏரியின் மையப் பகுதி யில் 250 மீட்டர் நீளத்துக்கு கண்ணாடி தளத்துடன் தொங்கும் கண்ணாடி மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இதில் படிக்கட்டுகள், லிப்ட் வசதியும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இது சிங்கப்பூரில் உள்ள மேக் ரிச்சிட்ரி டாப் பிரிட்ஜ் வடிவத்தில் அமைக்கப்பட இருக்கிறது. தற்போது இந்த பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இந்த பாலத்தின் மீது நடந்தால் தண்ணீர் மீது நடப்பது போல் பிரமிப்பாக இருக்கும். பயன்பாட்டுக்கு வந்ததும் கண்ணை கவரும் சுற்றுலா தலமாக மாறும்.