புதுச்சேரி, நவ.15- எரிவாயு சிலிண்டர் ஏற்றி செல்லும் லாரி ஓட்டுனர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கக் கோரி சிஐடியு சார்பில் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி அடுத்துள்ள வில்லியனூர் ஒதியம்பட்டு பகுதியில் உள்ள இந்திய ஆயில் கார்ப்பரேஷன் பாட்டலிங் பிளான்டில் எரிவாயு சிலிண்டர் ஏற்றி செல்லக்கூடிய லாரி ஓட்டுனர்களுக்கு 11 ஆண்டு காலமாக ஊதிய உயர்வு வழங்கப்பட வில்லை.சென்னையில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஒரு லோடுக்கு ரூ. 1,200 தினசரி ஊதியம் வழங்கப்படுவதை போல் புதுச்சேரியிலும் ரூ.550 தொகையில் இருந்து உயர்த்தி வழங்க வேண்டும். ஓட்டுநர்கள் ஓய்வெடுப்பதற்காக அறை மற்றும் கழிப்பறை வசதி அமைத்துக் கொடுக்க வேண்டும். மருத்துவ காப்பீடு ஈ.எஸ்.ஐ மற்றும் பி.எப் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி இந்தியன் ஆயில் கார்ப்ப ரேஷன் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க செயலாளர் மனோகரன் தலைமை தாங்கினார். சிஐடியு தனியார் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் புதுச்சேரி மாநில செயலாளர் எம்.பி. மதிவாணன், சிஐடியு புதுச்சேரி மாநில பொருளாளர் ரவிச்சந்திரன் சிஐடியு இணைச் செயலாளர் மணி பாலன் ஆகியோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். போராட்டத்தில் எரிவாயு சிலிண்டர் லாரி ஓட்டுநர்கள் திரளாக கலந்து கொண்டனர்.