சென்னை, ஜன. 9 - தமிழகம் முழுவதும் ஞாயிறன்று (ஜன.9) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் சென்னைக்கு வந்த பயணி கள் போக்குவரத்து வசதியின்றி அல்லல்பட்டனர். கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் தினசரி இரவு மற்றும் ஞாயிற் றுக்கிழமைகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி சனிக்கிழமையன்று (ஜன.8) இரவு 10 மணிக்கு தொடங்கிய ஊரடங்கு ஞாயிறு (ஜன.9) பகல் இரவு என தொடர்ந்தது. ஜன.8 இரவு பயணத்தை தொடங்கியவர்கள் 9ந் தேதி காலை சென்னையை வந்தடைந்தனர். அதன்படி ரயில், பேருந்துகளில் சென்னைக்கு வந்தவர்கள் பொதுப் போக்குவரத்து இன்றி அல்லல்பட்டனர். சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களுக்கு அருகில் போதுமான வாகன வசதியின்றி தவித்தனர். ரயில், பேருந்துகளில் பயணம் செய்தவர்கள் வாடகை மற்றும் சொந்த வாகனங்களில் பயணச்சீட்டுகளை காட்டி வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஆட்டோ ஒட்டுநர்கள் பயணிகளை ஏற்று செல்ல மறுத்துவிட்டனர்.