districts

சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு

திருவள்ளூர்,ஜூன் 6-  

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் 250 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    பூண்டி, புழல், செம்பரம் பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகளில் மொத்தம் 11,757 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். செவ்வாய் காலை நிலவரப்படி ஏரியில் 6857 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. இந்நிலை யில் சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் 250 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மி. கனஅடி ஆகும். இதில் 693மி.கனஅடி மட்டுமே தண்ணீர் உள்ளது. தற்போது கோடை வெயில் அதிகரித்து உள்ள நிலையில் ஏரியில் உள்ள தண்ணீர் வெப்பத்தின் காரணமாக வீணாவதை தடுக்கும் வகை யில் சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் அனுப்பப்படுகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது குடிநீர் ஏரிகளில் நீர் இருப்பு குறைந்த அளவில் தான் உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் 7768 மி.கனஅடி தண்ணீர் இருந்தது. தற்போது 6875மி.கன அடி மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும் இப்போது பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் வந்து கொண்டு இருப்பதால் சென்னையில் குடிநீர் தேவையில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.