districts

இலவச தையல் இயந்திரம் விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி, 16-

    இலவச தையல் இயந்திரம் பெறுவதற்கு விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்ற ஏழைப் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தெரிவித்தார்.

   இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாவட்ட சமூக நலத்துறையின் வாயிலாக இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ், விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்ற ஏழைப் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திட வருவாய் வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட வருமானச் சான்று (ஆண்டு வருமானம் ரூ. 72.000க்குள் இருக்க வேண்டும்) வட்டாட்சியரிடம் பெறப்பட்ட இருப்பிட சான்று. பதிவு பெற்ற தையல் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட தையல் பயிற்சி சான்று (குறைந்தபட்சம் 6 மாத பயிற்சி பெற்றிருக்க வேண்டும்) வயது சான்று (20 முதல் 40 வயது வரை தகுதி), சாதிச்சான்று, விண்ணப்பதாரரின் (வண்ணப் புகைப்படம் கடவுச்சீட்டு அளவு-2) வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்றவர் என்பதற்கான சான்று, ஆதார் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

   மேலும் விண்ணப்பங்களை http://Kallakurichi.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், எண் 30 சி வ.உ.சி.நகர், 5ஆவது தெரு, கச்சிராயபாளையம் ரோடு, கள்ளக்குறிச்சி 606 213 என்ற முகவரியில் வரும் 23ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.