விழுப்புரம், ஜூலை.14-
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை (ஜூலை 14) நடைபெற்ற திருநங்கைகள் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில் தமிழ்நாடு முதலமைச்சர் திருநங்கைகள் சமூகத்தில் பாதுகாப்பினை உறுதி செய்திடவும், சுயமாகவும், சுதந்திரமாகவும் செயல்படும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், திருநங்கைகளுக்கான மாதாந்திர ஓய்வூதியத்தினை ரூ.1,000த்திலிருந்து ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்கி திருநங்கைகளின் வாழ்வாதாரத்தினை மாநில அரசு பாதுகாத்து வருகிறது என்று கூறினார்.
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின், திருநங்கைகளின் பெரும்பாலான கோரிக்கையாக இருப்பது சுயமாக சுயதொழில் தொடங்குவதற்கு மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி, மாதாந்திர ஓய்வூதியத்தொகை, மருத்துவ காப்பீடு அட்டை, இலவச வீட்டுமனைப்பட்டா, பசுமை வீடு போன்ற பல்வேறு கோரிக்கைகளாகும். எனவே, திருநங்கைகள் தங்கள் அடிப்படை தேவைகளை கோரிக்கை மனுக்களாக வழங்கினால் உடனடி தீர்வின் மூலம் தீர்வுகாணப்பட்டு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என மாவட்ட ஆட்சியர் சி.பழனி தெரிவித்தார்.