சிதம்பரம், ஏப். 16 - கடலூரில் சாலை விரிவாக்கப் பணிக்காக 194 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சிதம்பரம் அருகே வீராணம் ஏரி கரையில் உள்ள பூதங்குடி கிராமத்திலிருந்து - வாழக்கொல்லை கிராமம் வரை 4.5 கிலோ மீட்டர் தூரம் ரூ.3 கோடி செலவில் புதிய தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சாலையின் தரத்தை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதன் பின்னர் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் பேசுகையில், கடலூர் மாவட்டத்தில் சாலை விரிவாக்கப் பணிக்காக ரூ.195 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடலூரில் இருந்து மடப்பட்டு வரை 37 கிலோ மீட்டர் தூரம் சாலைகள் விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக சாலை ஓரத்தில் உள்ள மரங்கள் வெட்டப் படுகிறது. இதற்கு மாற்றாக 10 ஆயிரம் புதிய மரங்கள் நடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்டும் மாவட்டமாகும். இதில் 22 இடத்தில் கல்வெட்டுப் பாலம் அமைக்கப்பட்டால் வெள்ள பாதிப்பு இருக்காது என்றும் அவர் கூறினார். இந்த ஆய்வின் போது காட்டுமன்னார் கோவில் சட்டப்பேரவை உறுப்பினர் சிந்தனைச்செல்வன், மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் ஆகியோர் உடனிருந்தனர்.