சென்னை.ஆக 17
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வணிக வளர்ச்சிக்கு 2023-24ஆம் நிதியாண்டில் ரூ.1,100 கோடி கடன் உதவி வழங்க இருப்பதாக கினரா கேபிடல் நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நிறு வனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி திருநாவுக்கரசு, இந்த நிறுவனங்கள் தங்கள் வர்த்தகத்திற்கு தேவையான கடன் உதவியை அவர்களின் ஸ்மார்ட்போனில் இருந்தே உடனடியாக விண்ணப்பிக்கலாம் என்றார்.
கடந்த 2023–ம் நிதி ஆண்டில் மொத்தம் ரூ.656 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இது 2022–ம் நிதி ஆண்டைக் காட்டிலும் 130 விழுக்காடு அதிகம் ஆகும் என்றார். நிறுவனம் தொடங்கப்பட்ட கடந்த 2012–ம் ஆண்டு முதல் இதுவரை 33,000 நிறுவனங்களுக்கு ரூ.1,960 கோடி கடன் உதவி அளித்துள்ளது என்றும் அவர் கூறினார்.
பெண்களுக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கும் உத்தரவாதம் இல்லாத கடன் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். தமிழ்நாட்டில் உள்ள 2,140 பெண் தொழில்முனைவோருக்கு ஹெர்விகாஸ் வணிகக் கடன் திட்டத்தின் மூலம் 226 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.