புதுச்சேரி, ஜூன் 10-
கால மாற்றத்திற்கேற்ப தொழில்களிலும் நவீன மாற்றங்கள் உருவாகி வருகிறது. இதில் சலூன் கடைகளும் தப்பவில்லை. கிராமங்களில் மரத்தடியிலும், புறநகர் பகுதிகளில் சிறிய கடைகளிலும் இருந்த முடி திருத்தகங்கள் இன்று நவீனமய மாகியுள்ளது. நாடு முழுவதும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த கடைகளை நடத்தி வருகின்றன. இந்த கடைகளில் ரூ.500 முதல் ரூ.5 ஆயிரம் வரை முடி திருத்தம், முகம் அழகுபடுத்துதல், தாடியை அழகுபடுத்துதல் போன்றவை செய்யப்படுகிறது. தற்போதைய இளைஞர்கள் விதவிதமான சிகை அலங்காரத்தோடு உலா வருகின்றனர். இந்நிலையில் புதுவை சாரம் பகுதியை சேர்ந்த விஜய் என்பவர் காமராஜர் சாலையில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவர் கடையில் முடி திருத்தம் செய்ய ரூ.100 முதல் ரூ.150 வரை கட்டணமாக வசூலிக்கிறார். ஆனால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் 10 ரூபாய் கட்டணத்தில் முடி திருத்தம் செய்கிறார். தினசரி காலை 7 மணி முதல் 10 மணி வரை மட்டும் இந்த சலுகை கட்டணத்தில் மாணவர்களுக்கு முடி திருத்தம் செய்கிறார். அதன்பிறகு வழக்கமான வாடிக்கையாளர்களுக்கான பணியை தொடங்குகிறார்.
புதுவையில் ஒரு சில தினங்களில் பள்ளி திறக்க உள்ள நிலையில் இந்த கடையை பற்றி தெரிந்த பெற்றோர், மாணவர்களோடு காலையிலேயே இங்கு வந்து விடுகின்றனர். ரூ.10க்கு டீ கூட குடிக்க முடியாத நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்காக முடிதிருத்தம் செய்யும் விஜய்க்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.