சென்னை, பிப்.5 சென்னையில் 15 மண்டலங்களில் 37 இடங்களில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. வெள்ளியன்று ஒரே நாளில் மட்டும் 2,112 பேர் மனுதாக்கல் செய்தனர். ஆண்கள் 960 பேரும், பெண்கள் 1,151 பேரும், திருநங்கை ஒருவரும் மனுதாக்கல் செய்தனர்.சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கு வருகிற19-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது இதற்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 28-ந்தேதி தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது. கடைசி நாளில் மனுதாக்கல் செய்ய அதிகளவில் குவிந்தனர். சுயேட்சைகளும், பிற கட்சியினரும் மாலை வரை மனுதாக்கல் செய்தனர். சென்னையில் 15 மண்டலங்களில் 37 இடங்களில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மட்டும் 2,112 பேர் மனுதாக்கல் செய்தனர். ஆண்கள் 960 பேரும், பெண்கள் 1,151 பேரும், திருநங்கை ஒருவரும் மனுதாக்கல் செய்தனர். 200 வார்டுகளுக்கும் மொத்தமாக இது வரையில் 3,546 பேர் மனுதாக்கல் செய்து உள்ளனர். இதில் 3 திருநங்கைகள் அடங்குவார்கள். ஆண்களை விட பெண்கள் அதிகளவு போட்டியிடுவதற்கு வேட்பு மனு வழங்கி உள்ளனர். 1,696 ஆண்களும், 1,847 பெண்களும் சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டி யிட மனுதாக்கல் செய்துள்ளனர். பெரும்பாலான வார்டுகளில் 20-க்கும் மேற்பட்டவர்கள் மனுதாக்கல் செய்தனர். வார்டு 190-ல் 29 பேரும், 1-வது வார்டில் 8 பேரும் மனுதாக்கல் செய்தனர். 86-வது வார்டில் 34 பேரும் மனுதாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை சனிக்கிழமை தொடங்கியது. வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கு 7-ந்தேதி கடைசி நாளாகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.