districts

சென்னை முக்கிய செய்திகள்

விபத்தில்  3 பேர் பலி

 செங்கல்பட்டு, ஆக.16-  மதுராந்தகம் அருகே சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்ததால் ஏற்பட்ட சாலை விபத்தில் மூன்று பேர் உடல் நசுங்கி பலியாகினர். மதுராந்தகம் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அய்யனார் கோவில் என்ற இடத்தில் திண்டுக்கல்லில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று மதுராந்தகம் அருகே அய்யனார் கோவில் என்ற இடத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த 20 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில் காரில் பயணம் செய்த மூன்று ஆண்களும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதனை அடுத்து தகவல் அறிந்து அங்கு வந்த மதுராந்தகம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் கதிரவன் (வயது50),கார்த்திக்(32), நந்தகுமார் (42) ஆகிய மூவர் எனவும் இதில் கார்த்திக் சென்னையில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்வதற்காக உறவினர்களுடன் சென்ற போது இந்த கோர விபத்து நடைபெற்றுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து மதுராந்தகம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதலமைச்சருக்கு  மீன்பிடி தொழிற்சங்கம் நன்றி

சென்னை, ஆக. 16- மீன் பிடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கியதற்காக தமிழ்நாடு முதலமைச்சருக்கு சென்னை செங்கை மீன்பிடி தொழிற்சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் இரா.லோகநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: சென்னை கோட்டையில் சுதந்திர தின கொடியேற்று விழாவையொட்டி முதல்வரின் பாதுகாப்பிற்காக ஆகஸ்ட் 15ஆம் தேதி கடலில் மீன்பிடிக்க தடை விதித்து மீன் துறை சார்பில் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று  தமிழ்நாடு முதல மைச்சருக்கு சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைத்தோம். அதனை ஏற்று மீன் துறை அறிவித்த தடை உத்தரவு திரும்ப பெறப்பட்டது. இதற்காக  தமிழ்நாடு முதல மைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

வீட்டுமனைப் பட்டா வழங்க  கிராம சபையில் தீர்மானம்

திருவண்ணாமலை,ஆக.16- திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த மாலையிட்டான் குப்பம் கிராமத்தில் வீடு இல்லாத சிறு பான்மை மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வலி யுறுத்தி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. வந்தவாசி வட்டம், காரம் மதுரா மாலையிட்டான்  குப்பத்தில் சுதந்திர தினத்தையொட்டி கிராமசபை கூட்டம்  ஊராட்சி மன்ற  துணைத் தலைவர் பிரபாகரன் தலைமையில் காரம்கிராமத்தில் நடைபெற்றது.   அதில், ஆவாஸ் பிளஸ் திட்டத்தின் மூலம் தேர்வு  செய்யப்பட்ட பயனாளிகள் தற்போது வசித்து வரும் குடிசைகள் தீ விபத்தில் எரிந்து போனதால், அரசுக்கு  சொந்தமான தரிசு புறம்போக்கு நிலத்தில்   உடனடியாக வீட்டுமனைப் பட்டா மற்றும் வீடு கட்டுவதற்கு ஆணை வழங்க வேண்டும் என்று கிராம சபை கூட்டத்தில்   ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.