சென்னை, மார்ச் 13- சென்னையில் மீன் விலை ‘கிடுகிடு’ என உயர்ந்து வருகிறது. வஞ்சிரம் மீன் மொத்த வியாபாரத்தில் 1 கிலோ 700 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சில்லறை விற்பனையில் ரூ.800 முதல் ரூ.850 வரையும் சங்கரா 1 கிலோ ரூ250 மொத்த விற்பனை செய்யப்படுகிறது. இதை வாங்கி விற்கும் வியாபாரிகள் ரூ.350 முதல் ரூ.400 வரை விற்கின்றனர். வவ்வால் ரூ.700, கொடுவா ரூ.600, பாறை மீன் ரூ.300, சுறா ரூ.350, கட்லா ரூ.250, கடம்பா ரூ.400, நெத்திலி ரூ.300, நண்டு ரூ.350-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மீன் விலை உயர்வு பற்றி சென்னை மீன் வியாபாரிகள் கூறுகையில், சென்னையில் காசிமேடு, சிந்தாதிரிப்பேட்டை, பட்டாளம், சைதாப்பேட்டை, மேடவாக்கம், அம்பத்தூர், புதூர், செங்குன்றம், புழல், காவாங்கரை, வானகரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பெரிய மீன் மார்க்கெட் செயல்படுகிறது. ஆந்திராவில் இருந்துதான் சென்னைக்கு அதிகமாக மீன்கள் லாரி லாரியாக வருகிறது. இது தவிர ஒடிசா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்தும் வருகிறது. சில மாதங்களாக ஆந்திராவில் உள்ள கடல் பகுதியில் மீன்கள் குறைந்து விட்டதால் மீன் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. ஆந்திரா, குஜராத், மும்பை, கொல்கத்தா போன்ற கடலோர நகரங்களில் கழிவுநீர் அதிக அளவில் கடலில் கலப்பதால் நாளுக்கு நாள் மீன் இனம் குறைந்து விட்டது. இதற்க முன்பு கிடைத்த அளவுக்கு இப்போது மீன் கிடைக்கவில்லை. எல்லா கடல் பகுதியிலும் இதே நிலைதான் மீன் வரத்து அதிகம் இருந்தால்தான் இனி மீன் விலை குறையும் என்கின்றனர்.