பொன்னேரி,ஆக.18-
பழவேற்காடு பகுதியில் சுமார் 60-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இவர்கள் பழவேற்காடு ஏரியில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். மீன்களை விற்பதற்கும் வாங்குவதற்கும் பழவேற்காடு மீன் ஏலக்கூடம் முக்கிய மையமாக உள்ளது. இந்த ஏல கூடம் அருகில் மீன் கழிவுகள் மற்றும் குப்பை கொட்டப்பட்டு குவிந்து கிடக்கிறது. அவை அகற்றப்பட்டு ஒரு மாதத்துக்கு மேல் ஆவதால் துர்நாற்றம் வீசிவருகிறது. இதனால் மீனவர்கள் மற்றும் அதனை வாங்க வெளியூரில் இருந்து வரும் வியாபாரிகள், மீன் பிரியர்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே மீன் ஏலக்கூடம் அருகே அகற்றப்படாமல் உள்ள கழிவுகளை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீன் வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.