சென்னை, மே 19 - உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தந்தையை அவரது மகள் தனது கல்லீரலின் ஒரு பாகத்தை தானமாக கொடுத்து காப்பாற்றியுள்ளார். சென்னையை சேர்ந்த 63வயது ஒய்வு பெற்ற அரசு ஊழியர் பசியின்மை, குமட்டல் உள்ளிட்ட அறிகுறிகளு டன் கடந்த பத்தாண்டுகளாக பாதிக்கப்பட்டிருந்தார். மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சைச்சாக சென்னை வடபழனி போர்ட்டீஸ் மருத்துவமனைக்கு வந்தார். அவரது உடலை மருத்துவர்கள் பரிசோதித்தபோது கல்லீரல் சுருக்க (liver cirrhosis) கோளாறு காரணமாக அவர் பாதிக்கப்பட்டிருப்பதும் நோய் முற்றிய கட்டத்தில் உள்ளதும் தெரியவந்தது. எனவே அவர் உயிர்பிழைக்க கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஒன்றே மாற்று வழி என பரிந்துரைக்கப் பட்ட நிலையில் அவரது இளைய மகள் கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்ய முன்வந்தார். இதையடுத்து டாக்டர் விவேக் விஜ் தலைமையிலான மருத்துவர்கள் குழுவினர் 8 மணிநேரம் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை செய்து முடித்தனர். தற்போது இருவரும் நலமுடன் உள்ளனர். பொதுவாக ஆரோக்கிமாக உள்ள 18 வயதுமுதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் கல்லீரல் தானம் செய்யலாம். நமது உடலில் கல்லீரல் மட்டுமே மீண்டும் வளர்ந்து பழைய நிலையை அடையக்கூடியது என்பதால் உயிருள்ள ஒருவர் கல்லீரல் தானம் கொடுக்கலாம் என்று அறுவை சிகிச்சை நிபுணர் ஸ்வாதி ராஜூ கூறினார். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு ரூ.18லட்சம் செலவானது. முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் இத்தகைய சிகிச்சைகளை கொண்டு வருமாறு மாநில அரசை வலியுறுத்தியுள்ளதாக பேர்டீஸ் வடபழனி மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பூர்ணசந்திரன் கூறினார்.