districts

img

சூரிய மின்சக்தி நிலையம் அமைக்க விதிவிலக்கு

சென்னை,பிப்.10- வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் 3 கிலோவாட் வரை மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்க சாத்தியக்கூறு அறிக்கை பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பல்வேறு திறனில் சூரிய சக்தி மேற்கூரை எனப்படும் சூரிய சக்தி மின் நிலையம் அமைக்கப்படுகிறது. இதை அமைக்க சாத்தியம் உள்ளதா என்பதற்காக மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் சாத்தியக்கூறு அறிக்கை பெற வேண்டும். இதற்கு மின் வாரியத்தின் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அனுமதி வழங்க மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் தாமதமாக செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, 3 கிலோ வாட் வரை மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்க சாத்தியக்கூறு அறிக்கை தேவையில்லை என மின்வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அடிப்படையில் சூரியசக்தி மின் உற்பத்தியை மேம்படுத்த மின்வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது, தமிழ்நாட்டில் சூரிய சக்தி மின் உற்பத்தித் திறன் 7,372 மெகா வாட்டாக உள்ளது. இதில், 526 மெகாவாட் கட்டிடங்களின் மேல் அமைக்கப்பட்ட சூரிய சக்தி மின் நிலையங்கள் ஆகும். மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைத்து சூரியசக்தி மின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் விண்ணப்பிக்கும் செயல்முறை எளிமைப் படுத்த பட்டுள்ளது. தற்போது, தாழ்வழுத்த மின் இணைப்பில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைப்பதற்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலமாக செயல்படுத்தப்படுகின்றன. இந்த செயல்முறையை மேலும் விரைவுபடுத்த 3 கிலோவாட் வரையிலான சூரியசக்தி மின் நிலையம் அமைக்க சாத்தியக்கூறு அறிக்கை பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.  மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்க விரும்புவோர் விண்ணப்பத்தை இணையதளம் மூலம் பதிவு செய்து இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்’ என்றனர்.