districts

img

எல்லீஸ் சத்திரம் தடுப்பணை மறு கட்டுமான பணி துவக்கம்

விழுப்புரம், நவ.24- விழுப்புரம் அருகே ஏனாதி மங்கலத்தில் தென்பெண்ணை ஆற்றில் உடைந்த பழைய எல்லிஸ் சத்திரம் தடுப்பணை கட்டுவதற்கான மறு கட்டுமானப் பணிகளை உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி வெள்ளிக்கிழமை (நவ.24) தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி ஏனாதி மங்கலத்தில் தென்பெண்ணை ஆற்றில் உடைந்த எல்லீஸ் சத்திரம் அணையருகே நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பழனி தலைமை தாங்கினார்.  விழுப்புரம் மாவட்டம், தென்பெண்ணை ஆற்றில் ஏனாதிமங்கலம் மற்றும் கப்பூர் கிராமங்களுக்கு இடையே ஆற்றின் குறுக்கே 1949-1950 ஆம் ஆண்டு எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு கட்டப்பட்டது. இந்த அணைக்கட்டின் உள்ள வலது புற பிராதன கால்வாய்களான எரளூர், ரெட்டி என இரு வாய்க்கால்கள் மூலம் 12 ஏரிகளுக்கும், இடது புற பிரதான கால்வாய்கள் ஆழங்கால், மரகதபுரம் மற்றும் கண்டம்பாக்கம் என மூன்று வாய்க்கால்கள் மூலம் 14 ஏரிகளுக்கு நீர் ஆதாரங்கள் கிடைக்கப் பெறுவதோடு, 13,100 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 2021-ஆம் ஆண்டு பெய்த கனமழை, ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் அணைக்கட்டு சேதமடைந்தது. இதனால் இவ்வணைக்கட்டு மூலம் பாசன வசதி பெற்று வந்த விவசாயிகளுக்கு பாசன வசதி குறைந்தது. சேதமடைந்த அணையை சீரமைக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  மேலும், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகளை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. அதனைத்தொடர்ந்து,  முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க, 2023-2024 ஆம் ஆண்டு ரூ.86.25 கோடியில் மறுகட்டுமானம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ரூ.86.25 கோடியில் நடைபெறும் இந்த பணி நிறைவடைந்தால் 26 ஏரிகளுக்கு தண்ணீர் கிடைக்கும். சுமார் 13 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி உறுதி செய்யப்படும். அணையை சுற்றியுள்ள 35 கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயன்பெறுவார்கள்.