புதுச்சேரி, ஜன.1- பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை விற்பனை செய்வதை ஒன்றிய பாஜக அரசு கைவிட வேண்டும் என்று ஓய்வூதியர்கள் சங்க மாநாடு வலியுறுத்தியுள்ளது. பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கத்தின் புதுச்சேரி மாவட்ட 4ஆவது மாநாடு பிஎஸ்என்எல் தலைமை அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் சக்திவேல் தலைமையில் நடைபெற்றது. மாநில செயலாளர் குப்புசாமி மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாவட்டச் செயலாளர் ராமகிருஷ்ணன் வேலை அறிக்கையையும், வாசித்தார். பொருளாளர் பாலசுப்பிரமணியன் வரவு செலவு அறிக்கையையும் தாக்கல் செய்தனர். பிஎஸ்என்எல் துணை பொது மேலாளர் சண்முகசுந்தரம் வாழ்த்திப் பேசினார். மாநிலத் தலைவர் நரசிம்மன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். மாநாட்டில், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி சேவை வழங்க வேண்டும், ரயில்வே, இன்சூரன்ஸ், வங்கி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டத் தலைவராக வி.ராமகிருஷ்ணன், செயலாளராக ராமகிருஷ்ணன், பொருளாளராக எம்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.