சென்னை பல்லாவரம் அடுத்த பம்மலில் கூடுதல் சாம்பார் கேட்டு தகராறு செய்ததில், உணவக மேலாளர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மலில் தனியார் உணவகம் செயல்பட்டு வருகிறது. அந்த உணவகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த அருண்(30) என்பவர் மேலாளராக பணி புரிந்து வந்தார். இந்நிலையில், அனகாபுத்தூரை சேர்ந்த சங்கர்(55) மற்றும் அவரது மகன் அருண்குமார்(22) ஆகியோர் உணவகத்திற்கு இட்லி பார்சல் வாங்க வந்துள்ளனர். அப்போது கூடுதலாகச் சாம்பார் வேண்டும் என்று தந்தையும் மகனும் கேட்டுள்ளனர். அதற்கு ஊழியர் மறுத்தால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் சங்கருக்கும், உணவக மேலாளர் அருணுக்கு வாக்குவாதம் முற்றியதாகத் தெரிகிறது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த தந்தையும், மகனும் வாடிக்கையாளர் முன்னிலையில் அருணை சரமாரியாக தாக்கினார். இதில், நிலைகுலைந்த அருண் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.
அவரை சக ஊழியர்கள் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சங்கர், அவரது மகன் அருண்குமார் இருவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இந்த தகராறில் கொலை செய்யப்பட்ட உணவக மேலாளர் அருணுக்கு அண்மையில் தான் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.