திருவண்ணாமலை,ஜன.5- திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருமஞ்சன கோபுர விதானத்தில் பாதி அழிந்த நிலையில் 400 ஆண்டுகள் பழமையான சேவப்ப நாயக்கர் காலத்து முருகன் ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தெற்கு பகுதியில் உள்ள திருமஞ்சன கோபுரத்தின் விதானத்தில் பாதி அழிந்த நிலையில் ஓர் ஓவியம் இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து, திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் தலைவரும் வரலாற்று ஆய்வாளருமான ராஜ் பன்னீர் செல்வம் மற்றும் சதர்சன், உதயராஜா ஆகியோர் ஆய்வு செய்தனர். அதில், அண்ணாமலையார் கோயிலில் ராஜகோபுரம், புரவி மண்டபம், கல்யாண மண்டபம் மற்றும் மேற்கு திருமால் பத்தியில் உள்ள ஓவியங்கள் ஆவணம் செய்யப்பட்டிருப்பதும் திருமஞ்சன கோபுர விதானத்தில் உள்ள ஓவியம் ஆவணம் செய்யப்படவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது. இந்த ஓவியத்தை 16-ஆம் நூற்றாண்டின் கடைசி பகுதியான சேவப்ப நாயக்கர் காலத்தை ஒட்டியதாக இருக்கலாம் என கருதப்படுகிறது. சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்த ஓவியத்தை சிதைவில் இருந்து தமிழக தொல்லியல் துறையும் இந்து சமய அறநிலையத்துறையும் முறையாக ஆவணம் செய்து பாதுகாக்க வேண்டும் என்று திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் கோரிக்கை வைத்துள்ளனர்.